தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் உப்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் கே.ஏ.எஸ். மகேந்திரன் (32). திருப்பனந்தாளில் பூக்கடை நடத்தி வந்த அவர், அதிமுக தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
மகேந்திரனுக்கு முனீஸ்வரி என்ற மனைவியும், இரண்டு வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சினைகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அரசியல் பரபரப்புகள் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படும் மகேந்திரன், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான சுயவீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அதிமுகவின் பல்வேறு அணிகளும் பிரிவுகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து, பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தமிழக அரசியலின் தற்போதைய சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும் தனது கருத்துகளை அவர் பகிர்ந்துள்ளார். அதில், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லையெனில் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மகேந்திரன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக சார்பில் அவரது குடும்பத்திற்கு ரூ.55 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாகவும், அவரது மகளின் கல்விச் செலவை கட்சி ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவித்தார்.
மேலும், தேர்தல் தோல்விகள் அல்லது அரசியல் ஏமாற்றங்கள் காரணமாக தொண்டர்களும் நிர்வாகிகளும் இதுபோன்ற தீவிர முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும், அனைவரும் மன உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, உயிரிழப்புக்கு முன் மகேந்திரன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
