தமிழக அரசியலில் வாக்குகளை வேட்டையாடப் பல வியூகங்கள் வகுக்கப்படுவது வழக்கம். ஆனால், தமிழக பா.ஜ.க.வின் தற்போதைய கிஃப்ட் அரசியல் வியூகம், அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது. “உழைப்பவனுக்கு ஊக்கம்” என்ற பெயரில், வெற்றி பெறும் தொகுதிக்குச் சொந்தமான மாவட்டத் தலைவர்களுக்குச் சொகுசு கார் வழங்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் நான்கு தாமரைகள் மலர்ந்தன. திருநெல்வேலி, நாகர்கோவில், மொடக்குறிச்சி மற்றும் கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க. பெற்ற வெற்றிக்குக் கைமாறாக, அந்தந்த மாவட்டத் தலைவர்களுக்கு தலா ஒரு ‘இன்னோவா’ கார் வழங்கப்பட்டது. இப்போது அதே பாணியை மீண்டும் கையில் எடுத்துள்ளது அக்கட்சித் தலைமை.
இந்த முறை வெற்றி கனியைப் பறிக்கும் மாவட்டத் தலைவர்களுக்கு மஹிந்திரா எக்ஸ்.யு.வி. அல்லது இன்னோவா கிரிஸ்டா போன்ற சொகுசு கார்கள் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் சாதாரண நபர்கள் கையால் அல்ல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கரங்களாலேயே இந்தப் பரிசுகள் வழங்கப்படும் என்ற தகவல் பா.ஜ.க. தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
