2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் பெரும் வெற்றியை பதிவு செய்தார்.
இதில் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர், அவர் அந்த தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, தற்போது பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வழக்கத்தைப் பின்பற்றி, முதலமைச்சர் விஜய் நாளை மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு புனித வளனார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தொண்டர்கள், வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவிக்க உள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 91,381 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் பெற்றிருந்தார். இதன் மூலம் 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றார்.
பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த தொகுதியை தக்க வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிக அளவில் மக்கள், தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு உள்ளிட்ட சில தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
