https://republictn.com/

அமெரிக்காவில் 10 சதவீத மக்கள் பசியால் வாடி தவிப்பதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் பெடரல் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, அமெரிக்காவில் வாழும் மக்களில் 10 சதவீத பேருக்கு போதிய உணவு வசதி கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தை விட இந்த ஆண்டில் அதிகமான மக்கள் பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு, மக்களின் வாழ்க்கைச் செலவுகளை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் வேலைவாய்ப்பு குறைபாடு போன்ற காரணங்களால் மக்களின் மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் நியூயார்க் பெடரல் வங்கி நடத்திய ஆய்வில், 1,200 குடும்பங்களிடம் சமூக, பொருளாதார மற்றும் குடும்ப நிலை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், 10 சதவீத குடும்பங்கள் தங்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில், 4 சதவீத குடும்பங்கள் மட்டுமே “எங்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை” அல்லது “குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியவில்லை” என தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 21.8 சதவீத குடும்பங்கள் தங்களது சேமிப்புகளை பயன்படுத்தியதாக தெரிவித்திருந்த நிலையில், இந்த ஆண்டு அது 36.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், 15.8 சதவீத குடும்பங்கள் உணவு நன்கொடைகளை சார்ந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அமெரிக்காவில் பசி என்பது பரவலான மற்றும் தீவிரமான சமூகப் பிரச்சினையாக மாறி வருவதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளதாக நியூயார்க் பெடரல் வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் வெளிப்படையாக வளர்ச்சி அடைந்திருந்தாலும், சமூகத்தின் ஒரு பெரிய பகுதி மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

குறைந்த வருமானம் கொண்டவர்கள், குறைந்த கல்வி பெற்றவர்கள் மற்றும் சிறிய குழந்தைகள் உள்ள குடும்பங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு குறைபாடு போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 hours ago at 13 hours ago