https://republictn.com/

அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலுக்கு அடுத்து, அத்துமீறல்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின.

இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. இந்த மோதலால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு ஈரானில் உள்ள ட்ரோன் கட்டுப்பாட்டு மையத்தின் மீது அமெரிக்கா நேற்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கண்டனம் தெரிவித்த ஈரான், அதற்கு பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன், அவற்றின் கட்டுப்பாட்டு மையமும் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய அமெரிக்காவுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப்படை தக்க பதிலடி கொடுக்கும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசம் கரிபாபாடி எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், காசா பகுதியை படிப்படியாக கைப்பற்றுமாறு இஸ்ரேல் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு உத்தரவிட்டுள்ளார். மேலும், காசாவின் 90 சதவீத நிலப்பரப்பையும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லியிலிருந்து இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் ஜூலை மாதம் வரை நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago