தவெக அரசுக்கு ஆதரவளிக்க தங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அனுப்பி வைத்ததாக பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தவெக அரசை கவிழ்ப்பதற்காகவோ அல்லது எந்த உள்நோக்கத்துடனோ இடதுசாரிகள் செயல்படவில்லை என்றும், தன்னாட்சி அதிகாரத்துடனேயே இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாக நிலைத்திருக்க வேண்டும். அதுதான் மக்களின் விருப்பம். அந்த விருப்பத்திற்கு நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட அரசியல் பாரம்பரியம் உள்ளதாகவும், இதுவரை எந்த மாநில ஆட்சியையும் இடதுசாரிகள் கவிழ்த்ததாக வரலாறு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ-களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டால் இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எழுந்த கேள்விக்கு, “அது கால சூழ்நிலையைப் பொறுத்து கணித்து முடிவு எடுக்கப்படும்” என்று வீரபாண்டியன் பதிலளித்தார்.
அதே நேரத்தில், ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரும் அரசியல் சூழ்நிலையில், தவெக அரசுக்கு வெளியிலிருந்து எந்த வகையிலும் இடையூறு செய்யாமல், 5 ஆண்டுகளும் ஆதரவளிக்க கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
