https://republictn.com/

கூட்டணி கட்சிகள் மீது காட்டப்படும் பண்ணையார் தனமும் ஆதிக்க மனப்பான்மையும் தான் திமுகவின் தோல்விக்கு காரணம் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், பிற கட்சிகளின் முடிவுகளை கேள்வி கேட்கும் அதிகாரம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எப்படி வந்தது என கேள்வி எழுப்பினார். கூட்டணி அமைத்த பிறகு திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் அமைச்சர்களை விமர்சித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“எங்களிடம் சொல்லாமல் முடிவெடுத்துவிட்டார்கள். எங்களிடம் கேட்டுவிட்டுத்தான் அவர்கள் அமைச்சராக இருக்க வேண்டும். அவர்கள் செய்தது தவறு. அதில் திரு. ஆ. ராசா கூறிய சில வார்த்தைகள் பேச முடியாத அளவுக்கு உள்ளன.

தேர்தல் முடிந்த பிறகு அந்தந்த கட்சிகளின் உயர்நிலைக் குழு எடுக்கும் முடிவுகளை கேள்வி கேட்கும் அதிகாரம் திரு. மு.க. ஸ்டாலினுக்கு எங்கிருந்து வந்தது? தோல்வி ஏன் ஏற்பட்டது என்று கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த பண்ணையார் தனமும் ஆதிக்க மனப்பான்மையும் தான் அவர்களின் தோல்விக்கு காரணம் என்பதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை,” என அவர் கூறினார்.

மேலும், அதிமுகவின் 90 சதவீத நிர்வாகிகள் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், எந்தவித பணப் பலனும் வழங்கி எம்.எல்.ஏ.க்களை அழைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

“எங்களிடம் எந்த ஆஃபரும் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை அழைக்கவில்லை. அப்படி ஒரு தலைமை எங்களுக்கு கிடையாது. இயற்கையாகவே அன்பும் நம்பிக்கையும் காரணமாகவே அதிமுகவில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எங்களிடம் வருகிறார்கள்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் இணைந்த நிலைப்பாட்டை எடுத்ததால், இன்னும் ஒரு மாதத்தில் 90 சதவீத நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வருவார்கள் என ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago