சுகாதாரத் துறை நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களிடையே உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பதிவான கர்ப்பிணிகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் நடத்திய இந்த ஆய்வு, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், புறநகர் பகுதிகளில் 38.1% கர்ப்பிணி பெண்களுக்கு அதிக ஆபத்துள்ள கர்ப்ப நிலை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களில் 26.1% பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருப்பதும், 18.4% பெண்களுக்கு முன்பு சிசேரியன் பிரசவம் செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், 10.2% பெண்களுக்கு கர்ப்ப கால நீரிழிவு நோய் இருப்பதாகவும், 6.7% பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், 32.2% பெண்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு முதல் தாய் இறப்பு தணிக்கை திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு பல தாய் நல சேவைகளை மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் திடீர் மகப்பேறு அவசர நிலைகள் குறைந்துள்ளன.
இருப்பினும், தற்போது கர்ப்பிணி பெண்களிடையே நீண்டகால நோய்கள் அதிகரிப்பது புதிய சவாலாக உருவெடுத்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களில் சிசேரியன் அறுவை சிகிச்சை விகிதம் 6.4% ஆக உயர்ந்துள்ளது. இது ஏற்கனவே பதிவாகியிருந்த 36.3% விகிதத்தை விட குறிப்பிடத்தக்க மாற்றமாக உள்ளது. முன்பு சிசேரியன் செய்த பெண்களுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதும் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிக மருத்துவ சிக்கல்கள் இருந்தபோதிலும் குழந்தைகளின் உடல்நிலை பெரும்பாலும் நல்ல நிலையில் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்த பிரசவங்களில் 99.7% குழந்தைகள் உயிருடன் பிறந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 15.6% குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மாதிரி பதிவு அமைப்பின் தகவல்படி, 2021 முதல் 2023 வரையிலான காலத்தில் தாய் இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் கேரளா, ஆந்திராவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் வழக்கமான பரிசோதனைகளில் நீரிழிவு, தைராய்டு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான பரிசோதனைகளையும் கட்டாயமாக சேர்க்க வேண்டும் என பொது சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு வழங்குவது, முன்பு சிசேரியன் செய்த பெண்களுக்கு தனிப்பட்ட ஆலோசனை வழங்குவது, மற்றும் தேவையான நேரத்தில் உயர்நிலை மருத்துவமனைகளுக்கு உடனடி பரிந்துரை செய்வது மிகவும் அவசியம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
