”மத்திய கிழக்கில் முன்பு போல அமெரிக்காவுக்கு இனி பாதுகாப்பான புகலிடம் கிடைக்காதுவளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் இனி பாதுகாப்பாக இருக்காது என்று ஈரான் அதிபர் மொஜ்தபா கமெனி கூறியுள்ளார். மூன்று மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் கமெனி இதனை தெரிவித்துள்ளார்.
தனது டெலிகிராம் சேனலில் கமெனி வெளியிறட்டுள்ள பதிவில், ”அமெரிக்கா – இஸ்ரேலுக்கு எதிரான போர் இஸ்லாமிய எதிர்ப்பின் வெற்றி. இஸ்ரேல் அதன் மிக மோசமான முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஒழிக..! இஸ்ரேல் ஒழி..! என்பது இஸ்லாமிய உலகின் முழக்கமாக நிலைத்திருக்கும். முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும். ஈரானின் வெற்றிச் செய்தியை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்குத் தெரிவியுங்கள். ஒரு புதிய பிராந்திய கட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” ” என கமெனி கேட்டுக்கொண்டார்.
கத்தாரின் தலைநகரான தோஹாவில் ஈரானிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சித்து வருகின்றன. ஆனாலும், விரைவில் எந்தவொரு பெரிய உடன்பாடும் எதிர்பார்க்கப்படவில்லை என்று அமெரிக்காவும் ஈரானும் தெரிவித்துள்ளன.
56 வயதான மொஜ்தபா கமெனி மார்ச் 8 அன்று ஈரானின் அதிபராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் அவர் எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு, பொதுவெளியில் காணப்படவில்லை. சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் அவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து கணிசமான யூகங்கள் நிலவுகின்றன.
கமெனியின் அறிக்கை வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள், கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற படகுகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின. அப்பகுதியில் பாதுகாப்பைப் ஏற்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.
ஏப்ரல் 8 முதல் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால், சமீபத்திய தாக்குதல்களுக்குப் பிறகு இந்த போர் நிறுத்தம் பலவீனமடைந்து வருவதாகத் தெரிகிறது. போரின் போது, மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் ஈரான் ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்தின.
