புனே மாடல் அழகி தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் சரணடைந்த நிலையில், உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு துவிஷா அழகு நிலையத்துக்கு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மிஸ் புனே அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற துவிஷா ஷர்மா, கடந்த ஆண்டு வழக்கறிஞர் சமன் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் கணவர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியான மாமியார் கிரிபாலா சிங் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு துவிஷா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அவரது உயிரிழப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட துவிஷாவின் கணவர் சமன் சிங், கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து, போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதட்சணை கொடுமையால் துவிஷா தற்கொலை செய்துகொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், அவரது உடலுக்கு இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை நடத்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில், உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு துவிஷா அழகு நிலையத்துக்கு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த காட்சிகளில் அவர் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். ஆனால் அதற்குப் பிறகு சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்த சம்பவம், துவிஷா மரணத்தைச் சுற்றியுள்ள சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
