https://republictn.com/

சிறுத்தைப் பல் மாலை விவகாரத்தில் பிரபல ராப் பாடகரான வேடன் கேரள வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் சிக்கி ஜாமினில் வெளியே வந்திருந்த வேடன், தற்போது மீண்டும் சிறுத்தைப் பல் தொடர்பான விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

சுள்ளிக்காட்டில் உள்ள முள்ளுச் செடி, காட்டு மரங்கள், காகிதப் பூக்கள் ஆகியவற்றை இணைத்து கவித்துவமான வரிகளை கோர்த்து ராப் இசை அமைத்து, கேரளாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தவர் வேடன். சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு எதிரான அவரது பாடல் வரிகள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

பின்னர், பாலியல் புகார் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர் சிறுத்தைப் பல் மாலை அணிந்திருந்ததாகக் கூறி, கேரள வனத்துறை அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த செயினை ரசிகர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கியதாகவும், அதில் இருப்பது உண்மையான சிறுத்தைப் பல்லா என்பது தனக்கு தெரியாது என்றும் வேடன் விளக்கம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட சிறுத்தைப் பல் பரிசோதனைக்காக கொல்கத்தாவில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அது உண்மையான சிறுத்தைப் பல் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் உடல் பாகங்களை வைத்திருப்பது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் வேடன் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கேரள வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

எவ்வளவு பிரபலமான நபராக இருந்தாலும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago