திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிற்கு சொந்தமான தமிழகம் முழுவதும் உள்ள 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் மற்றும் கே.என் நேருவின் தில்லைநகர் 5வது குறுக்குத் தெருவில் இருக்கும் அவரது வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களில் கட்சி நிதி(பார்ட்டி ஃபண்ட்) கேட்டு மிரட்டி வசூல் செய்ததாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்றொரு புறம் திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே. என். நேரு, நகராட்சி நிர்வாகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.800 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றதாக வழக்கு மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதுவரை சோதனைக்கான காரணம் அதிகாரப்பூர்வ தெரியவில்லை.
முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை ஈடுபட்டது அறிந்த திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அக்கட்சியினர் அவரது வீட்டிற்கு முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல்துறை துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கே.என். நேரு அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து அங்கிருந்த கட்சியினரை பார்த்து அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறினார். திமுக மூத்த நிர்வாகியான கே.என்.நேரு வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
