சமூக மாற்றத்தின் செயலாற்றல் மிக்க முன்னோடிகளாக பெண்கள் மாற வேண்டும் என்று பிரபல மூத்த நடிகையும் இயக்குநருமான ரேவதி வலியுறுத்தியுள்ளார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து, பெண்களுக்கு மட்டுமே அறிவுரை வழங்குவதைத் தாண்டி, ஆண் குழந்தைகளை சிறு வயது முதலே பொறுப்புணர்வுடனும் சரியான மதிப்புகளுடனும் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், பாரத் சோகா கக்காய் (BSG) அமைப்பின் சார்பில் 6-ஆவது மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது. “Women in the Century: Awareness and Action” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், நடிகையும் இயக்குநருமான ரேவதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு, உரிமைகள், சமூக மாற்றம் மற்றும் இளம் தலைமுறையினரின் பங்கு குறித்து பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

பெண்கள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், எங்கே செல்ல வேண்டும், எங்கே செல்லக் கூடாது என்று அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து அறிவுரை வழங்குவது, சமூகத்தில் முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்திவிடாது என்று ரேவதி தெரிவித்தார்.
அதற்கும் மேலாக, நம் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளை எவ்வாறு வளர்க்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். வீடு, பள்ளி, கல்லூரி என சிறுவர்கள் வளரும் ஒவ்வொரு சூழலிலும் அவர்கள் எதைப் பார்க்கிறார்கள், எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதில் பெற்றோர்களும் சமூகமும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
எது சரி, எது தவறு என்பதை ஆண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே ஆழமாகப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் உண்மையான மற்றும் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்கள் வெறும் விழிப்புணர்வுடன் நின்றுவிடாமல், அந்த விழிப்புணர்வை உறுதியான செயல்களாக மாற்ற வேண்டும் என்றும் ரேவதி கூறினார். தங்களின் சுய ஆற்றலை முழுமையாக உணர்ந்து, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களைத் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய காலகட்டத்தில் சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பரந்த அளவில் வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளைத் தங்களது திறமையின் மூலம் பெண்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான் அவர்களின் வளர்ச்சி அடங்கியுள்ளது என்றும் ரேவதி தெரிவித்தார்.
தங்களது தலைமுறையால் சாதிக்க முடியாத பல விஷயங்களை, இன்றைய ‘ஜென்-இசட்’ (Gen Z) தலைமுறை பெண்கள் நிச்சயம் சாதித்துக் காட்டுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், தங்களின் உரிமைகளுக்காகவும் சமூக அநீதிகளுக்கு எதிராகவும் துணிச்சலாகக் குரல் கொடுத்து வரும் ஜென்-இசட் மாணவர்களை “Hats off” என்று ரேவதி மனதாரப் பாராட்டியுள்ளார். இன்றைய இளைய தலைமுறையினரின் இந்தத் துணிச்சலான, தெளிவான அணுகுமுறை தனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்தரங்கம் வெறும் சொற்பொழிவு நிகழ்வாக மட்டும் அமையவில்லை. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த நிகழ்வில், முதியவர்கள் முதல் இளம் சிறுமிகள் வரை பல தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் தங்களது வாழ்க்கையில் எதிர்கொண்ட கடுமையான போராட்டங்கள் மற்றும் சவால்களை எவ்வாறு வெற்றிகளாகவும் சாதனைகளாகவும் மாற்றினார்கள் என்பது குறித்த தங்களது நிஜ வாழ்க்கைக் கதைகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர். இது நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் நெகிழச் செய்தது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து பேச நடிகை ரேவதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் சுவாரசியமான பின்னணி உள்ளது. 1983-ஆம் ஆண்டு பாரதிராஜாவின் ‘மண் வாசனை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரேவதி, ஆரம்ப காலம் முதலே சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்தவர்.

சினிமாத்துறையில் பெண்களின் பாதுகாப்புக்காகக் குரல் கொடுத்து வரும் Women in Cinema Collective (WCC) போன்ற அமைப்புகளிலும் ரேவதி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
பாரத் சோகா கக்காய் (BSG) அமைப்பு ஆண்டுதோறும் நடத்தி வரும் இந்த மகளிர் கருத்தரங்கங்கள், பெண்களை ‘சமூக மாற்றத்திற்கான ஊக்கிகளாக’ (Catalysts for Social Change) மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகின்றன.
“சமூக மாற்றத்தின் செயலாற்றல் மிக்க முன்னோடிகளாக பெண்கள் மாற வேண்டும். சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை பெண்கள் முன்னெடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கிற்கு ஏற்ப, பெண்களின் நூற்றாண்டு என்னிடமிருந்து தொடங்குகிறது” என்று ரேவதி வலியுறுத்தினார்.
‘விழிப்புணர்விலிருந்து செயல்பாட்டிற்கு’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், சமூகத்தின் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் பெண் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய ரேவதி, நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமான சமூக மாற்றத்தில் பெண்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அநீதிக்கு எதிராகக் கேள்வி கேட்பதும், ஒருவரின் கண்ணியம் மற்றும் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதும் மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய கருத்துகளுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் ஏற்பட்டாலும், இறுதியில் அவையே அர்த்தமுள்ள சமூக முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் என்றும் ரேவதி தெரிவித்தார்.
மேலும், “நம்முடைய நிலைமையை எப்படி மாற்றுவது, சமுதாயத்தில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவது, அதற்கான அடிப்படையாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அந்த மாற்றம் நம்முடைய வீட்டில் இருந்து, பள்ளியில் இருந்து, கல்லூரியில் இருந்து, அலுவலகத்தில் இருந்து என எல்லா இடங்களிலும் ஏற்பட வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்” என்றார்.
பெண்களுக்கான வாய்ப்புகள் அனைத்து துறைகளிலும் உள்ளதாகக் குறிப்பிட்ட ரேவதி, அந்த வாய்ப்புகளை ஒவ்வொரு பெண்ணும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார் என்பதும், அதன் மூலம் எவ்வாறு வளர்ச்சி அடைகிறார் என்பதும் அவரது தனிப்பட்ட திறமையைப் பொறுத்தது என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் BSG தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ராசி ஹஜூஜா, ஹேன் ஹுடான் நிறுவனத்தின் வேதிகா அகர்வால், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின் இணை நிறுவனர் டாக்டர் கல்பனா சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
