நடிகர் அஜித் குமார், தன்னால் இயன்றவரை கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்கப் போவதாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் அவரது தாயார் மோகினி மணி காலமான சோகத்திலிருந்து மீண்டு, மீண்டும் தனது ரேசிங் பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயங்களில் பங்கேற்க விரும்புவதாகவும், பந்தயங்களில் தொடர்ந்து ஈடுபடுவது தனது கடமை எனக் கருதுவதாகவும் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டிற்கான சர்வதேச கார் பந்தயத் திட்டங்களை தற்போது தீவிரமாகத் தயாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக துபாயை மையமாகக் கொண்டு வசித்து வரும் அஜித் குமார், பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் ‘ரெடான்ட்’ அணியுடன் இணைந்து தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள ‘ஏகே 64’ திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.
எனினும், சர்வதேச கார் பந்தயத் தொடர்களில் அஜித் குமார் முழு கவனம் செலுத்தி வருவதால், அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
