அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல எழுத்தாளர் ஈ. ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.42 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கீழ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டு மனுவை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 1990-களின் மத்தியில், நியூயார்க் நகரில் உள்ள ஒரு ஆடம்பர வணிக வளாகத்தின் ஆடை மாற்றும் அறையில், டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக எழுத்தாளர் ஈ. ஜீன் கரோல் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை டிரம்ப் முற்றிலும் மறுத்ததோடு, கரோலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, கரோல் டிரம்ப் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நடுவர் நீதிமன்றம், டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, ஈ. ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க கடந்த 2023-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி டிரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அவரது இறுதி மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 மில்லியன் டாலர் இழப்பீட்டு உத்தரவு தற்போது இறுதி செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கரோல் தொடர்ந்த மற்றொரு அவதூறு வழக்கில், டிரம்புக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு 83.3 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.690 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்தும் டொனால்ட் டிரம்ப் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு இன்னும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வரவில்லை.
5 மில்லியன் டாலர் இழப்பீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, 83.3 மில்லியன் டாலர் இழப்பீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கும் விரைவில் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
