தஞ்சையை அடுத்த குருங்குளம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் மற்றும் ஐயனார் கோவில் கிடாவெட்டு திருவிழா 26 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்றது.
குருங்குளம் அருகே உள்ள தேடகிரி பட்டியில் வீடு தோறும் பந்தல் அமைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு திருவிழா களைகட்டியது.
இந்த விழாவில் சுமார் 650 கிடாக்கள் வெட்டப்பட்டு, மட்டன் குழம்பு, கறி வறுவல், மீன் குழம்பு, மீன் வறுவல் உள்ளிட்ட அசைவ விருந்துகள் ஒவ்வொரு வீட்டிலும் பரிமாறப்பட்டன.
மும்மாரி மழை பொழிந்து, விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக இந்த கிடாவெட்டு திருவிழா நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும், 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் திருவிழா நடத்தப்படுவதாகவும், திருமண அழைப்பிதழ் போலவே திருவிழாவிற்கும் பத்திரிக்கை அச்சிட்டு உறவினர்களை அழைத்து சிறப்பாக விழா நடத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர்.
ஏழு நாட்கள் நடைபெறும் இந்த கிடாவெட்டு திருவிழாவால் குருங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் அசைவ விருந்தின் மணத்தில் கமகமக்கின்றன.
