திமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெற்றது. அதில் திமுக-வின் தற்போதைய மாவட்டங்கள் எண்ணிக்கை 77- என்பதை110 ஆக பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதாவது 2 தொகுதிகளுக்கு 1 மாவட்ட செயலாளர். தேவைப்பட்டால் 3 தொகுதிகளுக்கு 1 மாவட்ட செயலாளர். கட்சியின் கிளை கழகம் முதல் மாவட்ட செயலாளர்கள் வரையிலான வயது வரம்பு, எத்தனை முறை பதவி வகிக்க முடியும் என விரிவான 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த 110 மாவட்டங்கள் எது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து திமுக சீனியர் தலைவர்களிடம் பேசியபோது, “மறுசீரமைப்பு என்பது மாவட்ட செயலாளர்களையோ மற்ற நிர்வாகிகளையோ மாற்றுவது மட்டும் இல்லை. கட்சியையே தலைகீழாக மாற்றுகிற சீரமைப்பு நடவடிக்கைகளைத்தான் மு.க.ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார்.
ஏனென்றால் திமுகவில் 1300-க்கும் அதிகமான ஒன்றிய செயலாளர்கள் இருக்கிறார்கள். இப்போது ஒன்றிய செயலாளருக்கு அதிகபட்ச வயது வரம்பு 60. 2 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என தீர்மானம் போடப்பட்டு இருக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் பதவியில் இருக்கிற 1300- பேரில் 850-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிய செயலாளார் பதவியை இழப்பார்கள்.
அதே போல மாவட்ட செயலாளர்களின் வயது 70. அவர்களும் 3 முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்பது இன்னொரு தீர்மானம். ஆகையால் இருக்கிற 77 மாவட்ட செயலாளர்களில் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் மாவட்ட செயலாளர்கள் ஆக முடியாது. ஆகையால்தான் இதனை கட்சியையே புதிதாக கட்டமைக்கிற தலைகீழ் மாற்றம் என சொல்றோம்.

இப்போது 110 மாவட்டங்களை மு.க.ஸ்டாலின் இப்போது அறிவித்து இருக்கிறார். 2 தொகுதிகளுக்கு 1 மாவட்டம் என 94 மாவட்டங்களும், 3 தொகுதிகளுக்கு 1 மாவட்டம் எங்கிற அடிப்படையில் 15 மாவட்டங்களும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சோழிங்கநல்லூர் மட்டுமே தனி மாவட்டம்.
இந்த 110 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் என ஒருவரை அறிவித்து விடலாம் என மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி சொல்லி வருகிறார். ஆனால் கனிமொழியோ, ”எதற்கு மாவட்ட பொறுப்பாளர் என ஒருவரை நியமிக்க வேண்டும்? அவர் தனியாக இப்போதே அடுத்த மாவட்ட செயலாளர் பதவிக்கு லாபி செய்யவா? அப்படியெல்லாம் மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிக்கக் கூடாது” என கடுமையாக எதிர்க்கிறார். இந்த மாவட்ட பொறுப்பாளர்கள் விவகாரத்தில் ஸ்டாலின் இன்னும் இறுதியான முடிவு எதையும் எடுக்கவில்லை.
கட்சி கட்டமைப்புகளில் மாற்றம் என வரும் போது ‘தலைமை பதவி’களில் என்ன மாறுதல்? என்றுதான் கட்சிகாரர்கள் அனைவரும் கேட்கிறார்கள். திமுகவைப் பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்திதான் தேர்வு செய்வது வழக்கம். அப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றால் ‘பொதுக்குழுவை’ கூட்டித்தான் நடத்த முடியும்.

பொதுக்குழுவை இப்ப எப்படி கூட்டுவது? ஒரு உதாரணத்துக்கு செப்டம்பர் 15-ம் தேதி திமுகவின் வழக்கமான முப்பெரும் விழா நடத்த இருக்கிறோம். அதற்குள் பொதுக்குழுவை கூட்டி தேர்தல் நடத்தி விட முடியுமா? எனக் கேட்டால் சாத்தியம் இல்லை. ‘அவசர பொதுக் குழு’ என கூட்டினாலும் ‘தேர்தல்’ என நடத்த வேண்டும். ஆகையால் உடனே தலைமை பதவிகளில் மாற்றங்கள் என்பது சந்தேகம்தான்” என்கிறார்கள்.
மறுபுறம் “திமுகவின் அடுத்த தலைவர் கனிமொழி. 2031-ல் திமுகவின் முதல்வர் வேட்பாளர் கனிமொழி” என ஏகப்பட்ட வீடியோக்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறது.. இந்த வீடியோக்களை வெளியிடுவதன் பின்னணியில் கனிமொழிதான் இருக்கிறார்” என மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி சொல்லி புலம்பி வருவதாகவும் சொல்கிறார்கள்.
