தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு அறிவித்துள்ள “தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்திற்கான டெண்டரில், ஜோயாலுக்காஸ் நிறுவனம் ஒரு மோதிரத்திற்கு வெறும் ஒரு பைசா மட்டுமே சேவைக் கட்டணமாகக் கேட்டு டெண்டரை வென்றுள்ளது.
ஆனால், “ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை ஒரு பைசாவுக்கு வழங்குகிறார்கள்” என்பது தவறான புரிதல். உண்மையில், தங்கத்தின் அசல் விலையை அரசு ஏற்றுக்கொள்கிறது.
அரசு வெளியிட்ட டெண்டர் விதிகளின்படி, மோதிரம் தயாரிக்கத் தேவையான அசல் தங்கத்தின் விலை, IBJA சந்தை நிலவரப்படி, அரசால் முழுமையாக வழங்கப்படுகிறது. டெண்டரில் போட்டி என்பது தங்கத்தின் விலைக்கு அல்ல; அதற்கு மேலாக ஏற்படும் செய்கூலி, சேதாரம், ஹால்மார்க்கிங், காப்பீடு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்குத்தான் நடைபெற்றது.
இதில் ஜோயாலுக்காஸ் நிறுவனம் ஒரு மோதிரத்திற்கு வெறும் ₹0.01, அதாவது ஒரு பைசா மட்டுமே கூடுதல் கட்டணமாகக் குறிப்பிட்டு L1 எனப்படும் குறைந்த விலை டெண்டர்தாரராகத் தேர்வு செய்யப்பட்டது. இதனால், ஒரு பைசாவுக்கு தங்கத்தை வழங்குகிறது என்று கூறுவது சரியானதல்ல. தங்கத்தின் விலையை அரசு ஏற்றுக்கொள்கிறது; நிறுவனங்கள் மோதிரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான கூடுதல் செலவுகளை ஒரு பைசாவாகக் குறைத்துள்ளன என்பதே உண்மை.
இவ்வாறு லாபத்தை விட்டுக்கொடுத்து இவ்வளவு பெரிய ஆர்டரை நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டதன் பின்னணியில் ஒரு முக்கியமான வணிக உத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வணிகத் துறையில் “Loss-Leader Strategy” என அழைக்கின்றனர். அதாவது, தற்போதைய விற்பனையில் லாபத்தை விட்டுக்கொடுத்து, எதிர்காலத்தில் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குவது.
இந்தத் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. அந்த மோதிரங்கள் சம்பந்தப்பட்ட நகை நிறுவனங்களின் பிராண்ட் பெட்டிகளில் வழங்கப்படுவதால், அந்த நிறுவனங்களின் பெயர் குடும்பங்களின் நினைவில் நீண்ட காலம் இடம்பெற வாய்ப்புள்ளது.
எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகளுக்குக் காதணி விழா, பிறந்தநாள் அல்லது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக நகைகள் வாங்கும்போது, தங்களுக்கு ஏற்கெனவே மோதிரம் வழங்கிய அதே நகை நிறுவனத்தை நாடக்கூடும் என்பதே இந்த வணிக உத்தியின் அடிப்படை நோக்கமாக பார்க்கப்படுகிறது.
₹755 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டத்தில், ஜோயாலுக்காஸ் நிறுவனத்திற்கு 70 சதவீத ஆர்டரும், இதே ஒரு பைசா விலைக்கு தயாரித்து வழங்க ஒப்புக்கொண்ட கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு 30 சதவீத ஆர்டரும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நிறுவனத்தை மட்டுமே சார்ந்திருக்காமல், திட்டம் தடையின்றி நடைபெறுவதற்காக ஆர்டர் இரு நிறுவனங்களுக்கும் பிரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த டெண்டரில் மொத்தம் 11 பெரிய நிறுவனங்கள் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோயாலுக்காஸ் நிறுவனம் ஒரு பைசா என்ற குறைந்த விலையை குறிப்பிட்ட பிறகு, அந்த விலை மற்ற நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, அதே விலையில் செய்து தர முடியுமா என கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் மட்டுமே ஒரு பைசாவுக்கு சம்மதித்ததால், ஆர்டர் 70:30 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.
சில நிறுவனங்கள் கூடுதல் சேவைக் கட்டணமாக ₹0.00 என பூஜ்ய ரூபாயைக் குறிப்பிட முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், டெண்டர் மென்பொருள் பூஜ்ய ரூபாய் தொகையை ஏற்காததால், தொழில்நுட்ப ரீதியாக அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையான ஒரு பைசா குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு பைசா என்பது தங்கத்தின் விலை அல்ல; டெண்டரில் குறிப்பிடப்பட்ட கூடுதல் சேவைக் கட்டணம் மட்டுமே.
ஒவ்வொரு ஒரு கிராம் தங்க மோதிரமும் 22 காரட் தரத்தில் தயாரிக்கப்பட வேண்டும். மேலும், தமிழக அரசின் முத்திரையும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் உருவப்படமும் மோதிரத்தில் பொறிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரக்குறைவு கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நகைகளை அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளும் வகையிலும், நிறுவனங்களுக்கு 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கும் வகையிலும் விதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் செய்வதற்காக அதிகளவில் கடன் வாங்குவதைத் தவிர்த்து, அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்வதை அதிகரிப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் அதிகரிப்பதன் மூலம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என சுகாதாரத்துறை நம்புகிறது.
இதனிடையே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2026 அன்று திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்துள்ள மற்றும் இனி பிறக்கப்போகும் சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக நான்கு மாதங்களுக்குத் தேவையான 1 லட்சத்து 28 ஆயிரம் மோதிரங்களைத் தயாரிக்கும் பணி இரு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், “ஒரு பைசாவுக்கு தங்க மோதிரம்” என்பது தங்கத்தின் விலையைக் குறிக்கும் தகவல் அல்ல. தங்கத்தின் அசல் விலையை அரசு ஏற்றுக்கொள்ளும் நிலையில், செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட கூடுதல் செலவுகளை ஒரு பைசாவாகக் குறைத்து நகை நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்றுள்ளன.
எதிர்காலத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களை வாடிக்கையாளர்களாக ஈர்க்கும் வாய்ப்பாக இந்தத் திட்டத்தை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்பதே இதன் பின்னணியில் உள்ள முக்கியமான வணிக உத்தியாக பார்க்கப்படுகிறது.
