உடல் உறுப்பு மற்றும் திசு தானத்தில் (Organ and Tissue Donation) இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கான தேசிய விருதை, மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. 16-வது தேசிய உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த உயரிய விருதை வழங்கி தமிழ்நாட்டை கவுரவித்துள்ளது.
தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) சார்பில் ஆகஸ்ட் 3, 2026 அன்று நடைபெற்ற இந்த விழாவில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுப்ரியா பட்டேல், தமிழ்நாடு அரசுக்கான விருதை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜிடம் வழங்கினார்.
: தமிழ்நாடு கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 266 கொடையாளர்கள் (Deceased Donors) மூலம் 1,476 உடல் உறுப்புகளைப் பெற்று வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது. :
இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று, அவற்றை தேவையுள்ள நோயாளிகளுக்கு வெற்றிகரமாக மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் வழங்கும் ‘இறந்தவர் உடல் உறுப்பு தானத் திட்டத்தை’ (Deceased Organ Donation Programme) மிகச் சிறப்பாக செயல்படுத்தியதற்காகவே இந்த தேசிய அங்கீகாரம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானத்தை சிறப்பாக ஒருங்கிணைத்ததுடன், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகளவில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள தேவையான உரிமங்களை வழங்கி, நாடு முழுவதும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதும் இந்த விருதுக்கான முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
விருதைப் பெற்ற பிறகு பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், “இந்த விருது தமிழக அரசுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல; தங்களது மிகப்பெரிய துயரத்திலும் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய குடும்பங்களுக்கே முழுமையாகச் சேரும் பெருமையாகும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. குறிப்பாக, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்படும் உடல் உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
எனினும், உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தாலும், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான தேவை இன்னும் அதிகமாகவே உள்ளது. தற்போதைய நிலவரப்படி, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான தேவையில் சுமார் 7 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது.
அதேபோல், கல்லீரல், இதயம் மற்றும் நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கான தேவையில் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே மாற்று உறுப்புகள் கிடைத்து வருகின்றன.
மூளைச்சாவுக்குப் பிறகு உடல் உறுப்புகளை தானமாக வழங்கினால் உடல் சிதைந்துவிடும் அல்லது மரியாதைக்குரிய இறுதிச் சடங்கு செய்ய முடியாது என்ற தவறான நம்பிக்கை இன்னும் பொதுமக்களிடையே இருப்பதாகவும், இதுகுறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் நபர்களின் உடலுக்கு அரசு முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தும் நடைமுறையும் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.
அதேபோல், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முதலுதவி மற்றும் சிபிஆர் (CPR) பயிற்சிகளை வழங்கும் சிறப்பு திட்டமும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், உடல் உறுப்புகள் ஒதுக்கீட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், TRANSTAN என்ற பிரத்யேக ஆன்லைன் தளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் உறுப்புகள் தகுதியான நோயாளிகளுக்கு நியாயமான முறையில் ஒதுக்கப்படுவதை அரசு உறுதி செய்து வருகிறது.

உடல் உறுப்பு தானத் துறையில் மட்டுமல்லாமல், பல்வேறு வளர்ச்சித் துறைகளிலும் தமிழ்நாடு மத்திய அரசின் விருதுகளை தொடர்ந்து பெற்று வருகிறது. சமீபத்தில், வணிகம் மற்றும் கடலோர சரக்கு போக்குவரத்து சீர்திருத்தங்களுக்காக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் விருதையும், நீர் பாதுகாப்புப் பணிகளில் சிறந்த செயல்பாட்டிற்காக தெற்கு மண்டல அளவில் திருநெல்வேலி மாவட்டம் சிறந்த மாவட்டத்திற்கான அங்கீகாரத்தையும், நாட்டின் சிறந்த ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்திய மாநிலங்களில் தேசிய அளவில் இரண்டாம் இடத்திற்கான விருதையும் தமிழ்நாடு பெற்றுள்ளது.
இந்த நிலையில், உடல் உறுப்பு மற்றும் திசு தானத்தில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக மத்திய அரசு தமிழ்நாட்டை தேர்வு செய்து தேசிய விருது வழங்கியிருப்பது, மாநிலத்தின் சுகாதாரத் துறைக்கு கிடைத்துள்ள மிக உயரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
