Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

கோவையின் அழகை பாழ்படுத்தும் வகையில் அதிகரித்து வரும் போஸ்டர் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநகராட்சி சார்பில் சுவர்களில் சமூக விழிப்புணர்வு சுவரோவியங்கள் வரையப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Coimbatore

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் போஸ்டர்கள் ஒட்டப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள், பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள், நினைவேந்தல் அறிவிப்புகள் உள்ளிட்ட ஏராளமான போஸ்டர்கள் நகரின் முக்கிய சாலைகள், மேம்பாலங்கள், பொதுக் கட்டிடங்கள் மற்றும் சுவர் பகுதிகளில் ஒட்டப்பட்டு, நகரின் அழகை பெருமளவில் பாதித்து வருகின்றன.

இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், கோவை மாநகராட்சி நகரின் அழகை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி அதிகாரிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக அடுக்கடுக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் முழுமையாக அகற்றப்பட்டு, சுவர்கள் சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெறும் வகையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்க  பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
Republic Tamil

போஸ்டர்களை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், அந்தச் சுவர்களை மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றும் நோக்கில் பல்வேறு சமூக விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைக்கும் சுவரோவியங்களும் வரையப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இயற்கை விவசாயத்தின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம், தூய்மை இந்தியா, பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர் சேமிப்பு உள்ளிட்ட சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் தன்னம்பிக்கை வாசகங்கள், சாதனை படைத்தவர்களின் பொன்மொழிகள், வாழ்க்கையில் முன்னேறத் தூண்டும் கருத்துச் சித்திரங்களும் வரையப்பட்டு வருகின்றன.

Republic Tamil

வண்ணமயமான இந்தச் சுவரோவியங்கள் நகரின் தோற்றத்தை மாற்றியமைத்துள்ளதுடன், பொதுமக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து வருகின்றன. இதுவரை போஸ்டர்களால் மறைக்கப்பட்டிருந்த சுவர்கள் தற்போது கலைநயத்துடன் காட்சியளிப்பதால், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மாநகராட்சியின் இந்த முயற்சியை பாராட்டி வருகின்றனர். பலர் இந்த ஓவியங்களின் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

Republic Tamil

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கூறுகையில், அனுமதியின்றி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவது நகரின் அழகை மட்டுமல்லாமல், சுகாதாரத்தையும் சுத்தத்தையும் பாதிக்கிறது. அவற்றை அகற்றி, அதற்குப் பதிலாக சமூக விழிப்புணர்வு ஓவியங்களை வரைவது மிகவும் பாராட்டத்தக்க முயற்சியாகும். இதுபோன்ற பணிகள் நகரின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், பொதுமக்களும் சுவர்களில் சட்டவிரோதமாக போஸ்டர்கள் ஒட்டுவதைத் தவிர்த்து, மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையும் படியுங்க  "தமிழகத்திற்கு கல்வி ஒளி தந்த மாமனிதர்… வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் காமராஜரின் எளிய இல்லம்!"

நகரை தூய்மையாகவும், அழகாகவும் மாற்றும் நோக்கில் கோவை மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, நகரின் தோற்றத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த முன்னெடுப்பாகவும் பொதுமக்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago