தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டி, டெலிகிராம் (Telegram) செயலியின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (CEO) பாவெல் துரோவை (Pavel Durov), சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் ரஷ்யா இணைத்துள்ளது.

ரஷ்யாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு முகமையான FSB (Federal Security Service) இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உக்ரைன் உளவுத்துறையினரும், தீவிரவாத அமைப்புகளும் ரஷ்யாவிற்குள் நாசவேலைகள், தாக்குதல்கள் மற்றும் சைபர் மோசடிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைக்க டெலிகிராம் தளத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், சட்டவிரோத சேனல்கள் மற்றும் பாட்களை (Bots) அகற்றவும் டெலிகிராம் நிர்வாகம் தவறியதாக FSB குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், டெலிகிராமில் செயல்பட்டதாகக் கூறப்படும் பிரபல டேட்டிங் சாட்பாட் Leo Match Bot மூலம், உக்ரைன் உளவுத்துறையினர் ரஷ்ய இளைஞர்களைத் தொடர்புகொண்டு, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தவும், அரசு உள்கட்டமைப்புகளைத் தீயிட்டுக் கொளுத்தவும் தூண்டியதாகவும் FSB தெரிவித்துள்ளது.
இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக, 12 முதல் 22 வயதுக்குட்பட்ட 46 இளைஞர்கள் ரஷ்யாவின் 16 பகுதிகளில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல டெலிகிராம் சேனல்கள் மற்றும் பாட்களை நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை டெலிகிராம் நிர்வாகம் ஏற்க மறுத்ததாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் பாவெல் துரோவ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், ரஷ்ய சட்டப்படி அவருக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா தனது மீது குற்றவியல் விசாரணையைத் தொடங்கியபோது, பயனர்களின் தனியுரிமை மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்காகவே ரஷ்ய அரசு போலியான காரணங்களை உருவாக்குவதாக பாவெல் துரோவ் குற்றம் சாட்டியிருந்தார்.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டெலிகிராமின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில், பாவெல் துரோவ் நடுவிரலை உயர்த்திக் காட்டும் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டது. அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ரஷ்யாவில் பிறந்த 41 வயதான பாவெல் துரோவ், தற்போது பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) குடியுரிமைகளைப் பெற்றுள்ளதுடன், துபாயில் வசித்து வருகிறார்.
முன்னதாக, 2024ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசும், டெலிகிராம் தளத்தின் மூலம் நடைபெற்றதாகக் கூறப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைகள் தொடர்பான சட்டவிரோத உள்ளடக்கங்களைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, பாவெல் துரோவை பாரிஸ் விமான நிலையத்தில் கைது செய்து விசாரணை நடத்தியது.
அப்போது பிரான்ஸ் அரசின் நடவடிக்கையை ரஷ்யா கடுமையாக விமர்சித்திருந்தது. ஆனால் தற்போது, அதே போன்ற குற்றச்சாட்டுகளை ரஷ்யாவே துரோவ் மீது சுமத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் விதித்த பயணக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெற்ற பிறகு, 2025 மார்ச் மாதம் பாவெல் துரோவ் மீண்டும் துபாய்க்குத் திரும்பினார். பாதுகாப்பு காரணங்களால், அவர் தற்போது துல்லியமாக எந்த இடத்தில் உள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
ரஷ்யாவிற்கு வெளியே வசித்து வருவதால், பாவெல் துரோவை அவரது முன்னிலை இல்லாமலேயே (Arrest in Absentia) குற்றவாளியாக அறிவித்து, இன்டர்போல் (Interpol) மூலம் சர்வதேச ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவும், பின்னர் அவரை ரஷ்யாவிற்கு நாடு கடத்த (Extradition) முயற்சிக்கவும் வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், இன்னும் இரண்டு மாதங்களில் ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான ஸ்டேட் டூமா (State Duma) தேர்தல் நடைபெற உள்ளது. உக்ரைன் போரால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை எதிர்க்கட்சிகள் டெலிகிராம் தளம் வழியாக ஒருங்கிணைத்துவிடக் கூடாது என்பதற்காகவே ரஷ்யா இந்த நடவடிக்கையை அவசரமாக எடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ரஷ்ய அரசு அண்மைக்காலமாகவே டெலிகிராம் செயலியின் குரல் மற்றும் காணொலி அழைப்பு (Voice & Video Call) வசதிகளைத் தடை செய்துள்ளது. தற்போது ரஷ்யாவில் உள்ள பலர் VPN தொழில்நுட்பத்தின் உதவியுடன் மட்டுமே டெலிகிராமைப் பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும், கிரெம்ளின் மாளிகை மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட அரசு அமைப்புகளே தங்களது அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இன்னும் டெலிகிராம் தளத்தின் மூலமாகவே வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க முரண்பாடாக பார்க்கப்படுகிறது.
பாவெல் துரோவுக்கும் ரஷ்ய அரசுக்கும் இடையிலான மோதல் இது முதல் முறையல்ல. ரஷ்யாவின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான VKontakte (VK)-ஐ நிறுவியவரும் அவரே.
2014ஆம் ஆண்டு, உக்ரைன் ஜனநாயகப் போராட்டக்காரர்களின் கணக்கு விவரங்களை வழங்குமாறு ரஷ்ய அரசு கேட்டபோது, அதற்கு பாவெல் துரோவ் மறுப்பு தெரிவித்தார். பின்னர் தனது நிறுவனப் பங்குகளை விற்றுவிட்டு ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.
தற்போது, ரஷ்யா அவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருப்பது, டெலிகிராம் தளத்தின் எதிர்காலம் மற்றும் உலகளாவிய கருத்துச் சுதந்திரம் தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
