திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை எலிகள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மருத்துவமனையின் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்க்கொடி (60) என்பவர், வீட்டில் தவறி விழுந்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காலில் கட்டுப் போடப்பட்டு, கடந்த சில நாட்களாக பொது வார்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை மருத்துவமனை வார்டில் சுற்றித்திரிந்த எலிகள், தமிழ்க்கொடியின் காலில் கட்டுப் போடப்பட்டிருந்த கட்டை விரலைக் கடித்ததாக கூறப்படுகிறது. தமிழ்க்கொடி தீவிர சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், எலி கடித்ததை உடனடியாக அவரால் உணர முடியவில்லை. அருகில் இருந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் இதைக் கவனித்து மருத்துவப் பணியாளர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, மருத்துவக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தமிழ்க்கொடியை பரிசோதனை செய்தனர். எலி கடித்த பகுதியில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் போதிய சுகாதாரப் பராமரிப்பு இல்லை என்றும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே இந்தச் சம்பவத்திற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை, திருச்சி மாவட்டத்தின் முக்கிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாகும். திருச்சி மட்டுமின்றி, பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். பல்வேறு உயர் சிறப்பு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு வரும் இந்த மருத்துவமனையில், இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் பொது வார்டிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது, மருத்துவமனையின் சுகாதார நிலை மற்றும் எலி ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. நோயாளிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தி, எலி உள்ளிட்ட தொல்லைகளை முற்றிலும் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து வலுத்து வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
