ஜூன் 11ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், இந்த அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது படப்பிடிப்பு பணிகளில் தற்போது பிசியாக உள்ளார். குறிப்பாக ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் 10ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 11ஆம் தேதி காலை 9 மணியளவில் தனது முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக பரவி வருகின்றன. இதே சூழலில் அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஏற்கனவே பல்வேறு செய்திகள் பேசப்பட்டு வருகின்றன. தவெக சார்பில் ராகவா லாரன்ஸ் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தெளிவுபடுத்தும் வகையிலேயே அவர் ஜூன் 11ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.”
மேலும், தனது எக்ஸ் (X) தளப் பதிவில், தொடர்ந்து வரும் வதந்திகள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பு காரணமாக தற்போது ‘பென்ஸ்’ திரைப்பட பணிகளில் இருப்பதால், ஜூன் 10ஆம் தேதி வரை ஷூட்டிங் நடைபெற இருப்பதாகவும், அதற்குப் பிறகு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பில் “மாற்றம்” என்ற ஹாஷ்டேக் பயன்படுத்தப்பட்டிருப்பதும், அரசியல் வட்டாரத்தில் கவனத்தை அதிகரித்துள்ளது. இதனால் அவர் அரசியலுக்கு நேரடியாக வருகிறாரா அல்லது வேறு முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
திரைத்துறையில் விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நெருக்கமான உறவைப் பேணி வருவதாக அறியப்படும் ராகவா லாரன்ஸ், தற்போது அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளார்.
ஜூன் 11ஆம் தேதி அவர் வெளியிட உள்ள அறிவிப்பு என்ன என்பது குறித்து தற்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
