கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அவர் இதுவரை அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் அபிஜித் திப்கே, ஜூன் 6, 2026 அன்று டெல்லி விமான நிலையம் வழியாக இந்தியா திரும்புவதாக அறிவித்துள்ளார்.
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” மற்றும் “ஒட்டுண்ணிகள்” என்று விமர்சித்ததாகக் கூறப்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” என்ற நையாண்டி சமூக ஊடக இயக்கம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கத்திற்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்கள் ஆதரவு தெரிவித்ததால், அது நாடு முழுவதும் பரவலாக கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜூன் 6 ஆம் தேதி டெல்லி வரும்போது தன்னுடன் இணையுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அபிஜித் திப்கே அழைப்பு விடுத்துள்ளார். “நான் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய உடனேயே கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு கைது செய்யப்பட்டாலும், திட்டமிடப்பட்டுள்ள போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும்” என்று அவர் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது சமூக ஊடகப் பக்கங்கள் முடக்கப்பட்டதாகவும், தனக்கு இணையவழி கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியா திரும்பும் சூழலில் அவர் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தை மகாராஷ்டிராவில் வசிக்கும் அவரது பெற்றோரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
எனினும், கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி ஜூன் 6 ஆம் தேதி நடத்தவிருக்கும் நேரடிப் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அரசியல் எதிர்ப்புகள் காரணமாக தாம் கைது செய்யப்படலாம் என்று அபிஜித் திப்கே தன்னுடைய கணிப்பை மட்டுமே வெளியிட்டுள்ளார்.
இதுவரை அவரைக் கைது செய்வது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், அவர் தற்போது கைது செய்யப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், அபிஜித் திப்கேவின் இந்திய வருகை, அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அரசியல் பரபரப்பு ஆகியவை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
