நாசா மாநாட்டில் பங்கேற்க கோவையைச் சேர்ந்த 13 வயது மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் சாதனை படைத்துள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த இளம் மாணவர் ஹரிதுவரகன், அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாசா என்எஸ்எஸ் (NSS) கருத்தரங்கில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விண்வெளி குடியேற்றம் தொடர்பான தனது புதுமையான திட்டமான “ஆஸ்ட்ரோசனத் எரா”வை அவர் அந்த மாநாட்டில் வழங்க உள்ளார். இளம் வயதிலேயே அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி, சர்வதேச மேடையில் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் ஹரிதுவரகனுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மாணவர் ஹரிதுவரகன் கூறியதாவது:
“நான் டி.ஆர். ஹரிதுவரகன். நான் எட்டாம் வகுப்பில் படித்து வருகிறேன். எனது வயது 13. நான் நாசா என்எஸ்எஸ் ஸ்பேஸ் செட்டில்மென்ட் போட்டியில் பங்கேற்றேன். அதில் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, ஐஎஸ்டிஎஸ் (ISDS) அமைப்பிலிருந்து எனக்கு அழைப்புக் கடிதம் வந்தது. அதன் மூலம் வரும் ஜூன் 3ஆம் தேதி நாசாவிற்குச் செல்ல உள்ளேன்.
எனது பெற்றோர்களும் ஆசிரியர்களும் எனக்கு மிகுந்த ஆதரவு அளித்தனர். மேலும், என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உடன்பிறப்புகளும் எனக்கு பெரிதும் உதவி செய்து, தொடர்ந்து ஊக்கமளித்தனர்.
அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
