அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் எளிமையாக பெற்றுக்கொள்ளும் வகையில், புதிய வாட்ஸ்அப் சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை மக்கள் பெறுவதற்காக இ-சேவை மையங்கள் மற்றும் தனியார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த சேவைகளை பெற பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதனை தவிர்க்கவும், அரசு சேவைகளை மக்கள் எளிதாக பெற்றுக்கொள்ளவும் தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. “நம் அரசு நம் கையில்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாட்ஸ்அப் சேவையின் மூலம், அரசின் 20 துறைகள் வழங்கும் 66 சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற முடியும்.
78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “வணக்கம்” அல்லது “Hi” என்று செய்தி அனுப்பி இந்த சேவையை பயன்படுத்தலாம். வேறு ஏதாவது உதவி தேவைப்பட்டால் 1800 425 6000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், தமிழில் சேவையை பெற விரும்புவோர் “T” எனவும், ஆங்கிலத்தில் சேவையை பெற விரும்புவோர் “E” எனவும் பதிவிட வேண்டும். அதன் பின்னர், எந்த துறையின் சேவை தேவை என்பதை தேர்வு செய்து, அதற்கான சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
1800 425 1333 – தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் (TNeGA) முதன்மையான கட்டணமில்லா உதவி எண்.
1100 – தமிழக அரசின் முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் குறைதீர்க்கும் பிரிவின் (CM Helpline) பொதுவான உதவி எண்.
இந்த வாட்ஸ்அப் சேவையின் மூலம் பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை எளிதாக பெற முடியும்.
அதுமட்டுமின்றி, மின்கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல், இந்த வாட்ஸ்அப் சேவையின் மூலம் நேரடியாக செலுத்த முடியும்.
மேலும், பொதுமக்கள் விண்ணப்பித்துள்ள சேவைகளின் நிலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
