திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் அடுத்த சேந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
முருகனுக்கும் அவரது மகன் ரமேஷுக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், முருகன் கையில் அரிவாளுடன் ரமேஷின் வீட்டுக் கதவை வெட்டியுள்ளார். அந்த சத்தம் கேட்டு ரமேஷின் மனைவி பரிமளா வெளியே வந்தபோது, அவரையும் அரிவாளால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் உயிருக்கு அஞ்சிய பரிமளா உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.
அப்போது கையில் அரிவாளுடன் இருந்த முருகனை காவல்துறையினர் எச்சரித்து, அவரிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 75 வயதான முருகன் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், ஏற்கனவே சொத்து பிரச்சனை காரணமாக ரமேஷ் மீது முருகனின் மற்றொரு மகன் புகார் அளித்திருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
