தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 21ஆம் தேதி ஒரு முக்கியமான நாளாகப் பதிவாகியுள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் இன்று தனது அமைச்சரவைையை விரிவுபடுத்தியதன் மூலம் சமூக நீதியில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி அமைச்சரவை அமைந்துள்ளது ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படும் நிலையில், அந்த அமைச்சரவையில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பதவியேற்ற 23 அமைச்சர்களை சேர்த்து மொத்தம் 33 பேர் கொண்ட அமைச்சரவையில், ஏழு பேர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மொத்த அமைச்சரவையில் சுமார் 20 சதவீத இடங்கள் பட்டியலின அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பட்டியலின சமூகத்தினருக்கு அமைச்சரவை அளவில் இவ்வளவு பெரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஏழு அமைச்சர்களில் ஆறு பேர் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். குறிப்பாக, காங்கிரஸ் சார்பில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஸ்வநாதன், மதுரை மாவட்டம் மேலூர் பொதுத்தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது கவனம் பெற்றுள்ளது.
பொதுத்தொகுதியில் வெற்றி பெற்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது, முதலமைச்சர் விஜயின் சமூகநீதி அரசியலுக்கான முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
அமைச்சர்களின் பட்டியலில் எழும்பூரின் ராஜ்மோகன், ராசிபுரத்தின் லோகேஷ், ஒட்டப்பிடாரத்தின் மதன்குமார், அவிநாசியின் கமலி, அரக்கோணத்தின் காந்திராஜ் மற்றும் ஸ்ரீபெரும்புதூரின் தென்னரசு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், எதிர்காலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இணைந்தால், பட்டியலின அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெறும் கோஷங்களாக இல்லாமல், அதிகாரப் பகிர்வில் உண்மையான சமூகநீதியை வெளிப்படுத்தும் முயற்சியாக இந்த அமைச்சரவை விரிவாக்கம் பார்க்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகள் இளம் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களின் செயல்பாடுகள் தமிழகத்தின் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தில் எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
