திருச்சியில் காதல் பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவியை முகத்தில் கல்லால் கொடூரமாக தாக்கிய இளைஞர் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியார் கல்லூரி, மத்திய மண்டல ஐஜி அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இத்தகைய பாதுகாப்பு மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரும், இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அந்த இளைஞர், தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில், கல்லூரி மாணவி காஜாமலை பகுதியில் உள்ள தந்தை பெரியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவி தனது காதலனிடம் தெரிவித்த நிலையில், “எதுவாக இருந்தாலும் நேரில் பேசி தீர்த்துக் கொள்ளலாம்” எனக் கூறி மாணவியை அவர் நேரில் அழைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேசுவதற்காக வந்த மாணவியிடம் நீண்ட நேரமாக காதல் குறித்து விவாதித்துள்ளார். ஆனால், அதில் உடன்படாத மாணவியை ஆத்திரமடைந்த இளைஞர் கொடூரமாக தாக்கியுள்ளார். முகத்தில் கல்லால் தாக்கியதில் மாணவி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மாணவியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கே.கே. நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
