உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் கல்யாண்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் வினீத் மனோச்சா (63) வசித்து வந்தார். இவர், தனது மருமகள் ஷாலு மனோச்சா (36) இரவு நேரங்களில் பார்ட்டிகளுக்கு சென்று வருவதை கண்டித்துள்ளார். மருமகளை கண்காணிப்பதற்காக பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை வினீத் பொருத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகள் ஷாலு மாமனாரை போட்டுத்தள்ள முடிவு செய்தார்.
இதற்காக கூலிப்படைக்கு ரூ.6 லட்சம் தருவதாக கூறியது மட்டுமல்லாமல் கொலை செய்வதற்காக வீட்டின் போலி சாவியையும் அவர் முன்கூட்டியே தயாரித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி இரவு ஷாலு தனது கணவர் சுப்ரத் மற்றும் மகனுடன் திலக் நகரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு பார்ட்டிக்கு சென்றார். அப்போது போலி சாவி மூலம் வினீத்தின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
பின்னர் வினீத் அறைக்குள் வந்ததும் இருவரும் அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். நள்ளிரவு வீடு திரும்பியதும் வினீத் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வினீத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் கொலை குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டததை அடுத்து பதுங்கியிருந்த கொலையாளிகளை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அவர்கள் போலீசாரிடம் அளித்த தகவலின்படி ஷாலுவை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் மாமனார் கண்காணித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரூ.6 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி மாமனாரை மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
