சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கணினிகளின் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. மின்சார வாரிய தலைமை அலுவலகத்தின் 4, 5, 7 மற்றும் 10 ஆகிய தளங்களில் இருந்த கணினிகளில் இருந்து 18க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மர்மமான முறையில் காணாமல் போயின.
நிலக்கரி கொள்முதல், மின் மாற்றிகள் வாங்கியதற்கான டெண்டர் விவரங்கள், துறை சார்ந்த விசாரணை தொடர்பான ரகசியத் தரவுகள் இதில் இருந்ததால், ஊழல் ஆதாரங்களை அழிக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா என்ற சந்தேகம் எழுந்தது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணி செய்து வந்த கோபிநாத் என்பவர் இந்த ஹார்டு டிஸ்க்குகளை திருடியது தெரியவந்தது.
திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகளை பெங்களூருவைச் சேர்ந்த முரளி மனோகர் என்பவருக்கு குறைந்த விலைக்கு கோபிநாத் விற்றுள்ளார். அவர்களிடம் இருந்து மொத்தம் 34 ஹார்டு டிஸ்க்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக இந்த விசாரணை தமிழ்நாடு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்டெடுக்கப்பட்ட ஹார்டு டிஸ்க் தரவுகளை தடயவியல் சோதனையிட்டதில், முக்கிய தரவுகள் அழிக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மின்சாரத்ததுறையில் நடந்த ஊழலை வெளியில் கொண்டு வருவதில் தவெகக அரசு அடுத்த கட்டமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற கோபம் மின்வாரிய அதிகாரிகள் மத்தியில் பரவிக் கிடக்கிறது. திமுக ஆட்சியில் மின்சாரத்ததுறையில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் கடந்த ஆட்சியில் அலுமினியம் மின் கடத்திகள் வாங்கியதில் ரூ.347 கோடிக்கு ஊழல் நடந்ததாக ஒரு வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது. இந்த விவகாரத்தை சிபிஐ கையில் எடுத்த ஒரு வாரத்திலேயே மின்சார வாரியத்துடைய 34 ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போனதாக தகவல் வெளியானது.
மின்சாரத்ததுறையின் டெண்டர்கள், கொள்முதல் மற்றும் முக்கிய முடிவுகள் எல்லாமே இந்த டிஸ்கில்தான் இருந்தது என்கிறார்கள். டிஸ்க் திருட்டு தொடர்பாக காவல் துறையால் இருவர் பேர் கைது செய்யப்பட இந்த வழக்கை இப்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஆனால் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சிபிசிஐடி விசாரணையே கிணற்றில் போட்ட கல்லு மாதிரி இருக்கு என மின்வாரிய அதிகாரிகள் புலம்புகிறார்கள்.. கோடி கோடியாக கொள்ளை அடித்தவர்கள் ஈஸியா தப்பிக்கறதுக்கு வழி ஏற்படுத்துகிற மாதிரியான விஷயங்கள்தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. மின்வாரியத்துக்கான விஜிலன்ஸ் ஆபீசர் போஸ்ட் இரண்டு மாதமாக காலியாக இருக்கிறது. இதுதான் ஊழலை ஒழிக்கிற ஸ்டைலா? என கேள்வி கேட்கிறார்கள் மின்சார வாரிய அதிகாரிகள்.
