சேலம் மாநகரப் பகுதியில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, தண்ணீர் தொட்டிக்குள் மூட்டைகளில் கட்டி வீசப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நான்கு ரோடு அருகே உள்ள அரிசிபாளையம் ராமசாமி தெரு பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் கடந்த சில நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரமேஷ், மொட்டை மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது, அதற்குள் ஒரு பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து, ரமேஷ் பள்ளப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளப்பட்டி மற்றும் சூரமங்கலம் காவல் துறையினர், தண்ணீர் தொட்டிக்குள் இருந்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்டனர். பின்னர் உடல் பாகங்கள் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் மொத்தம் 7 துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததாகவும், அவை 3 வெவ்வேறு மூட்டைகளில் பிரிக்கப்பட்டு மொட்டை மாடியில் இருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் கண்டெடுக்கப்பட்ட வீடு ரமேஷ் என்ற பூசாரிக்குச் சொந்தமான வாடகை வீடு எனத் தெரியவந்துள்ளது. மொட்டை மாடியில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்தபோதுதான் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உடல் முற்றிலும் அழுகிய நிலையில் இருப்பதால், கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, சேலம் மாநகர காவல் துறையினர் அப்பகுதியில் சமீப நாட்களில் காணாமல் போன பெண்களின் பட்டியலைச் சேகரித்து, இந்த உடல் பாகங்களுடன் ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்தில் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டதுடன், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண் யார், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், எதற்காகக் கொலை செய்யப்பட்டார், கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளியை அடையாளம் காணவும், கொலைக்கான காரணத்தை கண்டறியவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, மூட்டைகளில் கட்டி தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டதால், காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தி, விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
பெண்ணின் அடையாளம் மற்றும் இந்த கொடூரக் கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்த விவரங்கள் போலீஸ் விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.
