நார்வே நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹெல் லிங் ஸ்வென்ட்சன் (Helle Lyng Svendsen), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஊடகச் சுதந்திரம் குறித்து எழுப்பிய ஒரே ஒரு கேள்வியின் மூலம் கடந்த மே 2026-இல் உலகம் முழுவதும் கவனம் பெற்றார்.
கடந்த மே 2026-இல் பிரதமர் நரேந்திர மோடி நார்வே நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவுடன் இணைந்து ஓஸ்லோவில் நடைபெற்ற கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார்.
நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு இரு தலைவர்களும் மேடையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது, நார்வேயின் டாக்ஸாவிசென் (Dagsavisen) நாளிதழின் செய்தியாளரான ஹெல் லிங் ஸ்வென்ட்சன் உரத்த குரலில், “பிரதமர் மோடி அவர்களே, உலகின் மிகச் சுதந்திரமான ஊடகத் துறையைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ஏன் நீங்கள் பதிலளிப்பதில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றதாகக் கூறப்பட்டது. இந்தக் காட்சியை ஹெல் லிங் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, நார்வே பத்திரிகையாளர் ஹெல்லே லிங் தனது சமூக வலைத்தளங்களில் இந்தியாவின் ஊடகச் சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் தொடர்பாக தொடர்ந்து கருத்துகளைப் பகிர்ந்து வந்தார். தற்போது இந்தியாவில் NEET தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்கள், அதில் இந்திய ஊடகங்களின் செயல்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்தும் அவர் தொடர்ந்து பதிவிட்டு வருவதால், மீண்டும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்
தனது பதிவுகளில், உலக ஊடகச் சுதந்திரத் தரவரிசை (World Press Freedom Index) குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதில், நார்வே உலகின் மிகச் சுதந்திரமான ஊடகச் சூழலைக் கொண்ட நாடாக முதல் இடத்தில் இருப்பதாகவும், இந்தியா 157-வது இடத்தில் இருப்பதாகவும் ஒப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
அதே நேரத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக (MEA) அதிகாரிகளிடமும் ஹெல் லிங் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. “இந்தியாவில் மனித உரிமை மீறல்களைத் தடுக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள்?”, “சர்வதேச சமூகம் இந்தியாவை ஏன் நம்ப வேண்டும்?”, “பிரதமர் மோடி எப்போது பத்திரிகையாளர்களின் நேரடி கேள்விகளை எதிர்கொள்வார்?” என்ற கேள்விகளை அவர் முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஹெல் லிங் கடுமையான இணையத் தாக்குதல்களுக்கு ஆளானதாக கூறப்பட்டது. சிலர் அவரை “வெளிநாட்டு சதித் திட்டத்தின் ஒரு பகுதி”, “இந்தியாவுக்கு எதிரான உளவாளர்” என்று விமர்சித்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும், அவரது தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஹெல் லிங் எதிர்கொண்டதாகக் கூறப்பட்ட இணையத் துன்புறுத்தலுக்கு எல்லைகளற்ற நிருபர்கள் (Reporters Without Borders – RSF) அமைப்பு கண்டனம் தெரிவித்தது. இணையத் தாக்குதல்களைத் தடுக்க இந்திய அரசு மற்றும் சமூக வலைத்தள நிறுவனங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முடக்கப்பட்டிருந்த அவரது சமூக வலைத்தளக் கணக்குகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியது.
ஓஸ்லோ சம்பவத்திற்குப் பிறகு, நார்வேயில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி சிபி ஜார்ஜை ஹெல் லிங் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவின் மனித உரிமை நிலைமை மற்றும் ஜனநாயக அமைப்புகள் குறித்து அவர் பல கேள்விகளை எழுப்பியதாக கூறப்பட்டது. இந்திய அதிகாரிகள் இந்தியாவின் ஜனநாயக அமைப்பு குறித்து விரிவாக விளக்கம் அளித்ததாகவும், அதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்தத் தகவலுக்கு பின்னர் விளக்கம் அளித்த ஹெல் லிங், “நான் எந்த வெளிநடப்பும் செய்யவில்லை. அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்த பிறகே அங்கிருந்து கிளம்பினேன்” என்று தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டார்.

நார்வே பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோதும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் தொடர்ந்தது. ஆஸ்திரேலியா இந்தியத் தூதரக அதிகாரியிடமும், பின்னர் ஆஸ்திரேலிய ஊடகங்களாலும் “பிரதமர் மோடி ஏன் திறந்த செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவதில்லை?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. தாம் எழுப்பிய கேள்வி சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியதில் மகிழ்ச்சி இருப்பதாக ஹெல் லிங் பின்னர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து பின்னர் அளித்த நேர்காணல்களில், “2014 முதல் பிரதமர் நரேந்திர மோடி ஒரு திறந்த செய்தியாளர் சந்திப்பைக் கூட நடத்தவில்லை என்பது எனக்குத் தெரியும். மக்களை ஆளும் தலைவர்களிடம் கடினமான கேள்விகளைக் கேட்பதே உண்மையான பத்திரிகைத் தர்மம். அதைத்தான் நான் செய்தேன்” என்று ஹெல் லிங் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவில் ஊடகச் சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் தொடர்பான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அவை குறித்து தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் ஹெல் லிங் ஸ்வென்ட்சன், இந்திய அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் மீண்டும் அதிகம் பேசப்படும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
