தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் புதிதாகக் கார் வழங்கப்படும் என்றும் கார் பராமரிப்புப் படியாக ரூ. 75,000, உதவியாளர் படியாக ரூ. 25,000 என ஒரு உறுப்பினருக்குத் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசு கடனில் இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், திமுகவின் 59 எம்எல்ஏக்களும் அரசு அறிவித்த காரினை பெற வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் எடுத்துள்ளோம். அரசுக்குத் தேவையில்லாத செலவுகளைக் குறைக்க, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, நலிவடைந்த எம்எல்ஏக்களுக்கு மட்டுமே கார் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலளிக்கையில்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையால் தான் முதல்வர் கார் வழங்குவதாக கூறினார். ஏழ்மையான உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கப்பட்டது. முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிடும்போது, அவையைப் பொறுத்தவரை எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்று நினைத்தே அறிவித்தார்.
எங்கள் பொதுச் செயலாளரிடம் கார் உள்ளது, என்னிடம் கார் உள்ளது, இங்குள்ள பலரிடம் கார் உள்ளது. நாங்கள் போய் எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டும் என்று கேட்கப்போவதில்லை. தமிழக வெற்றிக் கழகத்தில் ஏற்கனவே கார் வைத்திருப்பவர்கள் யாரும் கார் கேட்கப் போவதில்லை; எங்களது நிலைப்பாடும் அதுவேதான்.
எதிர்கட்சி தலைவருக்கு 3 வீடுகள் இருக்கிறது. இருந்தாலும் அவர் அரசு பங்களாவில் தங்கியிருக்கிறார் அல்லவா? அவர் தனது கோரிக்கை மடலை பொதுப்பணித்துறை அமைச்சரான என்னிடம்தான் கொடுத்தார். ‘உங்களுக்குச் சொந்தமாக இரண்டு மூன்று பங்களாக்கள் இருக்கின்றன; அதனால் அரசு பங்களா கொடுக்க முடியாது’ என்று நாங்கள் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
