கும்மிடிப்பூண்டி அருகே சென்னை பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கோஷ்டி மோதல் தொடர்பான தகராறில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் கிடைத்திருக்கிறது.
நேற்று இரவு நண்பர்கள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், சுடுகாட்டில் வைத்து கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கும்மிடிப்பூண்டி அருகே சென்னை பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த சானப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. மஞ்சு தம்பதியரான இவர்களுக்கு ரஞ்சன், ரமேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் ராகேஷ் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில், ரஞ்சன் சென்னையில் உள்ள பச்சையப்பாஸ் கல்லூரியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.
18 வயது நிரம்பிய ரஞ்சன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விசாரணையில் அவரது வயது மற்றும் கல்லூரியில் படித்து வருவதை கருத்தில் கொண்டு, திருவள்ளூரில் உள்ள அரசு அலுவலகத்தில் கவுன்சிலிங் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இவருக்கும் சிலருக்கும் கோஷ்டி மோதல் இருந்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில், அடிக்கடி செல்போனில் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று இரவு நண்பர்கள் சிலர் அவரை செல்போனில் தொடர்புகொண்டு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. அதேபோல், அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை ரஞ்சன் வீட்டின் அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில், சமாதியின் மீது தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட படுத்துக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கல்லூரி மாணவர் ரஞ்சனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து பாதிரிவேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
