அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நீதிமன்றம், மெட்டா நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் ₹5,400 கோடி, அதாவது 567 மில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் சிறுவர்களின் மனநலனைப் பாதிக்கும் என்பதையும், அவர்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்றவை என்பதையும் தெரிந்தே பொதுமக்களிடம் இருந்து மறைத்ததாக மெட்டா நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களிடம் தேவையற்ற சமூக வலைதளப் பயன்பாட்டையும் அடிமைத்தனத்தையும் தூண்டுவதுடன், அவர்களின் மனநலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மெட்டாவின் செயலிகள் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி நியூ மெக்சிகோ மாகாண அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.
₹9,000 கோடியைத் தாண்டிய அபராதம்
ஏற்கனவே கடந்த மார்ச் மாத விசாரணையில் மெட்டா நிறுவனத்திற்கு ₹3,570 கோடி, அதாவது 375 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது கூடுதலாக ₹5,400 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், மெட்டா நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த அபராதத் தொகை ₹9,000 கோடியைத் தாண்டி, சுமார் 942 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்த அபராதத் தொகையில் பெரும்பகுதியான சுமார் ₹4,000 கோடி சமூக வலைதளப் பயன்பாட்டால் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான மருத்துவச் சிகிச்சை மற்றும் மனநல மறுவாழ்வு சேவைகளுக்காக நேரடியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீதமுள்ள தொகை சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக வலைதளங்களின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா தளங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள்
அபராதம் விதித்ததுடன் மட்டுமின்றி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மெட்டா நிறுவனம் தனது சமூக வலைதளங்களில் பல்வேறு கடுமையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்களின் வயதைக் கண்டறியும் முறையை மெட்டா நிறுவனம் வலுப்படுத்த வேண்டும்.
மேலும், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அவர்களது கணக்குகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் இடையேயான தொடர்புகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். அதேபோல், சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாதத்திற்கு 90 மணி நேரம் மட்டுமே?
நீதிமன்ற உத்தரவின்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை ஒரு மாதத்திற்கு 90 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்த முடியாத வகையில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி நேரமான காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், இரவு நேரமான இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரையிலும், சிறுவர்களுக்கு எந்தவித புஷ் நோட்டிஃபிகேஷன்களும் அனுப்பக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுவர்களின் கணக்குகளில் பதிவுகளுக்கு வரும் ‘லைக்ஸ்’ எண்ணிக்கையை தானாக மறைக்கும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
அதேபோல், மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டுகள் சிறுவர்களுடன் காதல் அல்லது பாலியல் ரீதியான உரையாடல்களை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதன்முறையாக ‘பொதுத் தொல்லை’ என தீர்ப்பு
இந்த வழக்கில், ஒரு சமூக வலைதள நிறுவனம் பொதுமக்களுக்கு “பொதுத் தொல்லை” (Public Nuisance) ஏற்படுத்துவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பொதுவாக சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் புகையிலை நிறுவனங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் இந்தச் சட்டக் கருத்து, தற்போது சமூக வலைதள நிறுவனத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மெட்டாவின் செயலிகள் பொதுமக்களின், குறிப்பாக சிறுவர்களின், ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக நீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது.
மெட்டாவின் முன்னாள் பொறியியல் தலைவர் சாட்சியம்
நியூ மெக்சிகோ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் உள்நிலை நடைமுறைகள் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியதாகக் கூறப்படுகிறது.
மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பொறியியல் தலைவரான அர்துரோ பெஜார் (Arturo Béjar) அளித்த சாட்சியம் இந்த வழக்கில் முக்கியப் பங்கு வகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் தளத்தில் சிறுவர்களுக்கு பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள் தானாகப் பரிந்துரைக்கப்படுவதை நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அறிந்திருந்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் சாட்சியமளித்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களின் சிகிச்சைக்கு ₹4,000 கோடி
நீதிமன்றம் விதித்துள்ள ₹5,400 கோடி அபராதத் தொகையில், ₹4,000 கோடிக்கும் அதிகமான தொகையை பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மருத்துவச் சிகிச்சை மற்றும் மனநல மறுவாழ்வு மையங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நீதிபதி பிரையன் பீட்ஷீட் (Bryan Biedscheid) நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களால் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தேவையான சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் ஆதரவு சேவைகளை வழங்குவதற்காக இந்தத் தொகை பயன்படுத்தப்பட உள்ளது.
மெட்டா பங்குகளில் சிறிய சரிவு
இவ்வளவு பெரிய அபராதத் தீர்ப்பு வெளியான பிறகும், சர்வதேச பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 0.5 சதவீதம் மட்டுமே சரிவைச் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ₹5 லட்சம் கோடிக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த அபராதம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனப் பங்குச்சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
மெட்டாவின் முன்னாள் அதிகாரியும், ட்விட்டரின் தற்போதைய X தளத்தின் முன்னாள் ஐரோப்பிய துணைத் தலைவருமான புரூஸ் டெய்ஸ்லி, இந்த அபராதத் தொகை மிகப்பெரியதாகத் தெரிந்தாலும், மெட்டாவின் வருவாயுடன் ஒப்பிடும்போது “கடலில் ஒரு சொட்டு நீர் போன்றது” என விமர்சித்துள்ளார்.
40-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் வழக்கு
நியூ மெக்சிகோவைத் தொடர்ந்து, அமெரிக்காவின் 40-க்கும் மேற்பட்ட மாநிலங்களும், 1,300-க்கும் மேற்பட்ட பள்ளி மாவட்டங்களும் சிறுவர்களின் மனநலப் பாதிப்பு தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு எதிராக இதேபோன்ற பொதுநல வழக்குகளைத் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ மெக்சிகோ நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, இதுபோன்ற வழக்குகளுக்கு ஒரு முன்னோடியாக (Blueprint) அமையும் என்று நியூ மெக்சிகோ அட்டர்னி ஜெனரல் ரவுல் டோரஸ் தெரிவித்துள்ளார்.
இதனால், அமெரிக்காவில் சமூக வலைதள நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
