முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இயல்பான அழகும், பளபளப்பான சருமமும் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் மனதை நெகிழவைக்கும் பல கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களை விட, உள்மன அமைதியும், நேர்மறை எண்ணங்களும், நல்ல மனிதர்களின் துணையும் தான் ஒருவரின் உண்மையான அழகை வெளிப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், “உங்கள் முகப்பொலிவுக்கும் பளபளப்பான சருமத்திற்கும் என்ன காரணம்?” என்று கேட்கப்பட்டபோது, “உள்ளம் அழகாக இருந்தால் மேனியும் அழகாகத் தெரியும். எத்தனை விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், மனம் தூய்மையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால் மட்டுமே அந்த அழகு இயல்பாக வெளிப்படும்” என்று பதிலளித்தார்.
மேலும், “வாழ்க்கையில் நல்ல செயல்களைச் செய்து வாழ வேண்டும். நாம் செய்யும் நல்ல செயல்கள் நம் வாழ்நாள் முடிந்த பிறகும் நம்மை நினைவுகூரச் செய்யும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது சருமப் பொலிவின் உண்மையான ரகசியம் குறித்து பேசிய அவர், “உள்மன மகிழ்ச்சியும், நம்மைச் சுற்றி இருக்கும் நேர்மறையான மனிதர்களுமே எனது முகப்பொலிவுக்குக் காரணம். நமது உள்ளத்தில் இருக்கும் குழந்தைத்தனத்தைப் பாதுகாக்கும், பாதுகாப்பான உணர்வைத் தரும், நேர்மறை ஆற்றலை வழங்கும் நல்ல மனிதர்களுடன் வாழ்வதே உண்மையான அழகின் ரகசியம்” என்றார்.
அத்துடன், “நாம் மற்றவர்களிடம் காட்டும் அன்பும், நம்மைச் சுற்றியிருக்கும் நேர்மறை எண்ணங்களும் நமது முகப்பொலிவை இயற்கையாக அதிகரிக்கின்றன” என்றும் அவர் கூறினார்.

மன அமைதியுடன் சேர்த்து, தனது சரும ஆரோக்கியத்திற்காகப் பின்பற்றும் சில எளிய பழக்கங்களையும் ராஷ்மிகா பகிர்ந்துகொண்டார். தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் முகத்தில் இருக்கும் மேக்கப் மற்றும் தூசிகளை முழுமையாக அகற்றும் வகையில் இருமுறை முகத்தைச் சுத்தம் செய்வதாகவும், அதிகளவு தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் குடித்து உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
பயணங்களின் போதும், வெளியில் செல்லும் போதும் தவறாமல் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது தனது அன்றாட பழக்கங்களில் ஒன்றாக இருப்பதாகவும், எண்ணெய் அதிகமுள்ள மற்றும் துரித உணவுகளைத் தவிர்த்து, கீரைகள், காய்கறிகள் மற்றும் சத்தான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதாகவும் கூறினார்.
மேலும், அழகு சாதனப் பொருட்களை மட்டும் நம்பாமல், தனது தாய் மற்றும் பாட்டி சொல்லிக் கொடுத்த பாரம்பரிய இயற்கை பராமரிப்பு முறைகளையும் தொடர்ந்து பின்பற்றி வருவதாக ராஷ்மிகா தெரிவித்தார். குறிப்பாக, வெதுவெதுப்பான எண்ணெய் மசாஜ் தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுவதாக அவர் கூறினார்.
தனது சிறுவயதில் ‘காம்பினேஷன் ஸ்கின்’ மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகளால் அவதிப்பட்டதாகவும், பின்னர் தோல் மருத்துவரின் ஆலோசனையின்படி தனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திய உணவுகளை கண்டறிந்து அவற்றை உணவுப் பட்டியலில் இருந்து நீக்கியதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
தினமும் காலையில் எழுந்தவுடன் சுமார் ஒரு லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்படி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்த நீரையும் அருந்துவதாகவும் கூறினார்.
படப்பிடிப்புக்குச் செல்லும் முன் முகத்தில் இருக்கும் வீக்கத்தைக் குறைப்பதற்காக, ஐஸ் கட்டிகள் கலந்த குளிர்ந்த நீரில் சில நொடிகள் முகத்தை நனைக்கும் பழக்கமும் இருப்பதாக அவர் தெரிவித்தார். இது முகத்திற்கு உடனடி புத்துணர்ச்சியையும் தற்காலிகப் பொலிவையும் அளிப்பதாகக் கூறினார்.
அதேபோல், வாரத்திற்கு இரண்டு முறை காபித்தூள் மற்றும் சர்க்கரை கலந்து தயாரிக்கும் இயற்கை ஸ்க்ரப் மூலம் இறந்த சருமச் செல்களை அகற்றுவதோடு, தேன் மற்றும் கற்றாழை சேர்த்து தயாரிக்கும் இயற்கை ஃபேஸ் பேக்குகளையும் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
“எந்த ஒரு விலையுயர்ந்த கிரீம்களாலும் கிடைக்காத நம்பிக்கையையும் இயற்கையான பொலிவையும், மன அமைதியும் நேர்மறை எண்ணங்களுமே தருகின்றன. உண்மையான அழகு என்பது நம்மைச் சுற்றியிருக்கும் நல்ல மனிதர்களிடம்தான் இருக்கிறது” என்ற அவரது கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
