சேலம் மாவட்டம் அரியானூர் அருகே உள்ள சந்தனக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி கவிதா. இருவரும் தரி நெய்யும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். போதிய வருமானம் இல்லாததால், கடுமையான வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடியில் குடும்பத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஜூன் 19-ஆம் தேதி, அரியானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கவிதாவுக்கு நான்காவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே உள்ள மூன்று குழந்தைகளையே வளர்ப்பதில் சிரமம் ஏற்பட்டிருந்த நிலையில், புதிதாகப் பிறந்த குழந்தையையும் வளர்க்க முடியாது என தம்பதியினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தையை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு யாருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்து, குழந்தையை ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ரகசிய குழந்தை விற்பனை தொடர்பாக கொண்டலாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சிலம்பரசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சீனிவாசன் மற்றும் கவிதா தம்பதியரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், குழந்தையை வாங்கிச் சென்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பதியருக்கும் போலீசார் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தாங்கள் வாங்கிய குழந்தையை மீண்டும் ஒப்படைக்க சம்மதித்த அந்த தம்பதியினர், குழந்தையுடன் இன்று சேலம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வறுமையால் பாதிக்கப்பட்ட சீனிவாசன் – கவிதா தம்பதியினர் எந்த இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக குழந்தையை விற்றார்களா? அல்லது இதன் பின்னணியில் குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை விற்பனையில் ஈடுபடும் புரோக்கர் கும்பல் ஏதேனும் செயல்பட்டு வருகிறதா? என்ற கோணத்திலும் கொண்டலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வறுமையின் காரணமாக, பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம், சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
