இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இருவரும் முதன்முறையாக இந்தத் திரைப்படத்தின் மூலம் இணைகின்றனர். இதற்கு முன்பு கிருத்திகா உதயநிதி, வணக்கம் சென்னை, காளி மற்றும் பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடர் உள்ளிட்ட படைப்புகளை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், பூஜை தொடர்பான விவரங்களும் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன. படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பகட்ட தகவல்களில் சுயாதீன இசையமைப்பாளர் OfRO-வின் பெயரும் பரிசீலனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ளவுள்ளார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தத் திரைப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் மற்றும் நடிகர், நடிகையர் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் பாக்கெட் நாவல் திரைப்படத்திலும், ஜூலை மாத இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ள இயக்குநர் மணிரத்னத்தின் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தப் படங்களின் பணிகளை நிறைவு செய்த பின்னர், கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் அவர் முழுமையாக இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தப் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
