2026 சட்டமன்றத் தேர்தல் களம் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பை மே 4-ஆம் தேதி சந்திக்கப் போகிறது. “வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வெற்றிச் சான்றிதழை வாங்கியவுடன், அடுத்த நொடியே பனையூர் வந்துவிட வேண்டும்” என விஜய் பிறப்பித்துள்ள உத்தரவு உற்று நோக்க வைத்துள்ளது.
வேட்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விஜய் “வெற்றி பெற்றவர்கள் வேறு எங்கும் செல்லக்கூடாது. உங்களுக்காக நான் பனையூரில் காத்திருப்பேன். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, உங்கள் முகம் எனக்கு அங்கே தெரிய வேண்டும்” என கூறியிருக்கிறார்.
குதிரை பேரத்திற்கு செக்!
விஜய்யின் இந்த அவசர உத்தரவுக்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணம்—குதிரை பேரம். ஒருவேளை இழுபறி நிலை ஏற்பட்டால், பலமான திராவிடக் கட்சிகள் தவெக வேட்பாளர்களை வலைவீசிப் பிடிக்கத் துடிக்கும் என்பதை விஜய் நன்கு அறிவார். வெற்றி பெற்றவர்கள் சிதறிப்போனால் அது கட்சிக்கு பின்னடைவு. அவர்களை மற்ற கட்சிகள் தொடர்பு கொள்ளும் முன்பே பனையூருக்கு வரவழைத்து, ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதுதான் விஜய்யின் மாஸ்டர் பிளான்.

ஒருவேளை தவெக தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்தால், ஆட்சி அமைக்கத் துடிக்கும் மற்ற கட்சிகள் விஜய்யின் வாசலில் தான் காத்திருக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தவே, “யாரும் எங்கும் போகக்கூடாது” என முன்கூட்டியே வேலி அமைத்துள்ளார் விஜய்.
மே 4-ல் நடக்கும் பனையூர் யுத்தம்
தேர்தல் முடிவுகள் வெளியாகும் அந்த இரவில், பனையூர் அலுவலகம் ஒரு மினி கோட்டை போலவே காட்சியளிக்கப் போகிறது. வெற்றிக் களிப்பில் வரும் தம்பிகளை வரவேற்று, அடுத்தகட்டமாக யாரை ஆதரிப்பது அல்லது சட்டமன்றத்தில் எப்படிச் செயல்படுவது என்பது குறித்து விஜய் அன்றே தனது ‘ரிப்போர்ட்’ கார்டைத் திறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“நான் காத்திருப்பேன்” என்ற விஜய்யின் அந்த ஒற்றைச் சொல், இப்போது மற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. மே 4-ஆம் தேதி இரவு பனையூர் நோக்கிப் பாயும் கார்கள், தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டு கால தலையெழுத்தைத் தீர்மானிக்கப்போவது உறுதி!
