பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் மிண்டானாவ் தீவை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவுகோலில் 8.2 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சரங்கணி பகுதிக்கு மேற்கே சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மேலும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், பல்வேறு பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி இந்தோனேசியா, ஜப்பான், தைவான் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளிலும் திறந்த வெளிகளிலும் தஞ்சமடைந்தனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும் சேத விவரங்கள் மற்றும் உயிரிழப்பு குறித்த தகவல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
