தமிழக அரசியல் களம் தற்போது விஜய்யின் த.வெ.க-வை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. சினிமாத் திரையில் இருந்து நிஜமான அரசியல் போர்க்களத்திற்குள் குதித்துள்ள விஜய்யின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, சமீபகாலமாக அவரது தேர்தல் பிரசாரங்கள் திடீரென ரத்து செய்யப்படுவது பல்வேறு யூகங்களை எழுப்பிய நிலையில், அதன் பின்னணியில் உள்ள ‘ஜென்ட்டுர் செக்யூரிட்டி சர்வீசஸ்’ விறுவிறுப்பை கூட்டுகின்றன.
நிழலாய் தொடரும் பாதுகாப்புப் படை
கேரளாவைச் சேர்ந்த தொழில்முனைவர் நயீம் மூஸா என்பவரால் துபாயில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. மத்திய கிழக்கு நாடுகள் முதல் ஆசிய நாடுகள் வரை சுமார் 200 வகையான பாதுகாப்புச் சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம், உலகளாவிய வி.வி.ஐ.பி-க்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் புகழ்பெற்றது. இந்தியாவில் திருச்சூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான நயீம் மூஸா தான், தற்போது விஜய்யின் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறார்.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட, நயீம் மூஸாவின் அனுமதி இன்றி விஜய்யைச் சந்திக்க முடியாத அளவிற்கு இரும்புத்திரை போன்ற பாதுகாப்பை இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
100 பேர் கொண்ட ரகசியப் படை
முன்பு ஐந்து பாதுகாவலர்களுடன் மட்டுமே வலம் வந்த விஜய்க்கு, கரூரில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சுமார் 100 பேர் கொண்ட சிறப்புப் படை விஜய்யின் பிரசாரப் பயணங்களைக் கண்காணித்து வருகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், விஜய்யுடன் வாகனத்தில் இருக்கும் மூன்று கருப்பு உடைப் பாதுகாவலர்களைத் தவிர, மற்றவர்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் பொதுமக்களோடு மக்களாகக் கலந்து, நவீனத் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் கூட்ட நெரிசலைக் கண்காணித்து வருகின்றனர்.
அதிநவீன மொபைல் போன்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மூலம், பிரசாரத்தைத் தொடரலாமா அல்லது ரத்து செய்யலாமா என்ற முடிவை இந்தத் துபாய் நிறுவனம் தான் எடுக்கிறது.
அரசியல் முடிவுகளைத் தீர்மானிக்கும் பாதுகாப்பு
விஜய்யின் பிரசாரம் ரத்தாவது குறித்த தகவல், கட்சியின் முன்னணி நிர்வாகிகளான ஆனந்த் அல்லது ஆதவ் அர்ஜுனா போன்றவர்களுக்கே பின்னர்தான் தெரியவருகிறது. அந்த அளவிற்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. கேரள சட்டமன்றத் தேர்தலில் நயீம் மூஸா வாக்களிப்பதற்காக, விஜய்யே தனது பிரசாரத்தை ஒருநாள் ரத்து செய்தார் என்றால், இந்த நிறுவனத்திற்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இதற்காக மாதம் தோறும் பல லட்சம் ரூபாயைச் செலவிட்டு வரும் விஜய், தனது அரசியல் பயணத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
தமிழக அரசியலில் இது ஒரு புதிய பரிணாமம். தொண்டர்களின் உற்சாகத்தை விட, தலைவரின் பாதுகாப்பு மிக முக்கியம் எனக் கருதும் விஜய், சர்வதேச தரத்திலான ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் தன்னை நிறுத்திக்கொண்டுள்ளார். ஒரு புதிய கட்சியின் தலைவர் இத்தனை பாதுகாப்பு அம்சங்களுடன் களம் இறங்குவது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு ஆச்சர்யமாகவே பார்க்கப்படுகிறது.
