புகழின் உச்சத்தில் இருந்த நடிகரை பொய்யான தகவல்கள் மற்றும் அவதூறு பரப்பி, திரைத்துறையில் இருந்து வீழ்த்த முயன்ற யூடியூபருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னால் பெரிய சதிவலை இருந்ததும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிம் சூ ஹியூன் தென் கொரியாவின் மிகவும் பிரபலமான இளம் நடிகர்களில் ஒருவராக விளங்கியவர். 2007ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான அவர், 2011ஆம் ஆண்டு வெளியான ட்ரீம் ஹை தொடரின் மூலம் புதிய உச்சத்தை தொட்டார். அதன் பின்னர் ஆசிய நாடுகள் முழுவதும் கொரிய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
மூன் எம்ப்ரேசிங் தி சன், மை லவ் ஃப்ரம் தி ஸ்டார், இட்ஸ் ஓகே டு நாட் பி ஓகே, க்வீன் ஆஃப் டியர்ஸ் போன்ற தொடர்கள் அவரது புகழை மேலும் உயர்த்தி, அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின.
இந்நிலையில், தென் கொரியாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருந்த கிம் சே ரோன், 2025ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெறும் 24 வயதிலேயே உயிரிழந்த அந்த நடிகையின் மரணம் பெரும் சர்ச்சையாக மாறியது.
இதற்கிடையில், கிம் சே ரோன் பள்ளி மாணவியாக இருந்த காலத்திலேயே நடிகர் கிம் சூ ஹியூனுடன் காதல் உறவில் இருந்ததாக “ஓவர்லாப்” என்ற யூடியூப் நிறுவனம் தகவல் வெளியிட்டது. பின்னர் ஏற்பட்ட பிரிவும், அதனைத் தொடர்ந்து நடந்த பிரச்சனைகளுமே நடிகை கிம் சே ரோனின் மரணத்திற்கு காரணம் எனவும் அந்த நிறுவனம் குற்றம்சாட்டியது.
இதற்கான ஆதாரங்கள் எனக் கூறி பல தகவல்கள் மற்றும் வீடியோக்கள் யூடியூப்பில் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கிம் சே ரோனின் குடும்பத்தினரும் கிம் சூ ஹியூன் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
ஆனால், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த கிம் சூ ஹியூன், கிம் சே ரோன் 18 வயதை கடந்த பிறகே அவருடன் காதல் உறவு ஏற்பட்டதாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். கடந்த ஆண்டு கண்கலங்கியபடி அவர் அளித்த பேட்டி பெரும் கவனத்தை ஈர்த்தது.
இதனால், அவரை கொண்டாடிய ரசிகர்களே பின்னடைந்தனர். சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் எழுந்தன. இந்த சர்ச்சையால் கிம் சூ ஹியூன் கடுமையான மனஅழுத்தத்துக்கு ஆளாகி, சிகிச்சை பெறும் நிலைக்கும் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த குற்றச்சாட்டுகள் அவரது புகழையும் திரை வாழ்க்கையையும் கடுமையாக பாதித்தன. பல பிரபல காஸ்மெடிக் மற்றும் லக்சுரி பிராண்ட் நிறுவனங்கள் அவருடன் இருந்த ஒப்பந்தங்களை ரத்து செய்தன. அவர் நடிக்க இருந்த புதிய தொடர்களும் திடீரென நிறுத்தப்பட்டன.
இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, நடிகை கிம் சே ரோன் பள்ளிப் பருவத்திலிருந்தே கிம் சூ ஹியூனுடன் காதலில் இருந்ததாக கூறப்படும் ஒரு ஆடியோ பதிவை அந்த யூடியூப் நிறுவனம் வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது காவல்துறையின் விசாரணையில், அந்த ஆடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி பதிவு என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
