https://republictn.com/

உண்மையான சந்தோஷம் எங்கே இருக்கிறது?

பரம்பரை பரம்பரையாக நாமெல்லாம் சில விஷயங்களை மட்டுமே நம்பிக் கொண்டு வாழ்கிறோம். சொந்த வீடு கட்ட வேண்டும், சொந்த கார் வாங்க வேண்டும், பெரிய வாழ்க்கை வாழ வேண்டும் என்பதையே சந்தோஷத்தின் அளவுகோலாக நினைக்கிறோம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் நமக்கு புரிவதில்லை.

நாம் “இது கிடைத்தால் தான் வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்” என்று நம்பும் அந்த விஷயம் நடந்துவிட்டால்கூட, அந்த மகிழ்ச்சி சில நாட்கள் மட்டுமே நீடிக்கும்.

உதாரணமாக, சொந்த வீடு கட்டினால் ஒரு வாரம் சந்தோஷமாக இருப்போம். அதன் பிறகு மனம் அடுத்த ஆசையைத் தேட ஆரம்பித்துவிடும். “இன்னும் பெரிய வீடாக இருந்திருக்கலாமே”, “இன்னொரு நிலம் வாங்கியிருக்கலாமே” என்று ஆசைகள் தொடர்ந்துகொண்டே போகும். இது வீடு மட்டும் அல்ல; வாழ்க்கையின் பல விஷயங்களிலும் இப்படித்தான்.

உண்மையான சந்தோஷம் பெரிய விஷயங்களில் இல்லை. அது சின்ன சின்ன தருணங்களில் இருக்கிறது.

குழந்தைகளுடன் மணிக்கணக்காக விளையாடிப் பாருங்கள். அவர்களின் உலகத்தில் உட்கார்ந்து பேசிப் பாருங்கள். அதைவிட பெரிய சொர்க்கம் இருக்காது.

ஒரு நாள் தனியாக நடைப்பயிற்சி செல்லுங்கள். காலையிலோ மாலையிலோ, உங்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனால் சில நாட்களில் அதுவே மனதிற்கு அமைதியாக மாறிவிடும். காதில் இசை கேட்டு தனியாக நடந்து பாருங்கள். அந்த தனிமை, உங்களை உங்களுக்கே அறிமுகப்படுத்தும்.

இயற்கை சூழலில் சில மணி நேரம் அமைதியாக அமர்ந்து பாருங்கள். காட்டுப் பகுதிகளிலோ, மரங்களின் நடுவிலோ, இயற்கையோடு நேரம் செலவழித்துப் பாருங்கள். அதில் கிடைக்கும் அமைதி, வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்று.

மனைவியுடன் மனம் திறந்து பேசுங்கள். வீட்டுக் கணக்கு, செலவு, பட்ஜெட் பற்றிய பேச்சுகளைத் தாண்டி, வாழ்க்கை, புத்தகங்கள், உலக அரசியல், கனவுகள், எண்ணங்கள் பற்றி பேசுங்கள். அப்படி பேசிப் பேசித்தான் ஒரு உறவின் உண்மையான அழகு புரியும்.

திருமணம் என்பது குடும்பம் நடத்துவதற்காக மட்டும் அல்ல. “இன்று எனக்கு நடந்த ஒரு விஷயத்தை என் வாழ்க்கைத் துணையிடம் பகிர வேண்டும்” என்ற எண்ணம் வரத் தொடங்கும் போது தான் அந்த உறவின் ஆழம் புரியும்.

ஒரு நல்ல படம் பார்க்கும்போதோ, பிடித்த இசை கேட்கும்போதோ, மழையை ரசிக்கும்போதோ கூட உண்மையான மகிழ்ச்சி கிடைக்கலாம்.

சந்தோஷம் என்பது பெரிய சாதனைகளில் இல்லை. அது அன்றாட வாழ்க்கையின் சின்ன சின்ன தருணங்களில் மறைந்து கிடக்கிறது.

நீங்கள் அதை வெளியில் தேடி தேடி அலைந்தால், அதன் மதிப்பும் காலப்போக்கில் குறைந்து கொண்டே போகும். ஆனால் அந்த சின்ன தருணங்களை ரசிக்க கற்றுக்கொண்டால், வாழ்க்கை மெதுவாக அழகாக மாறும். ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago