பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறுபான்மை இந்துச் சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்யப்படுவதாகத் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே, தாண்டோ அல்லாஹ்யார் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுத சிறுமிகள்
கச்சி கோலி சமூகத்தைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய சீதா, ரூபி என்ற இரு சகோதரிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக அவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இந்த வழக்கில் சிறுமிகள் இருவரையும் காவல்துறை தாண்டோ அல்லாஹ்யார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது, “நாங்கள் எங்கள் பெற்றோருடன் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறோம்” என்று சிறுமிகள் மன்றாடி அழுதுள்ளனர். ஆனால், நீதிமன்றம் அவர்களைப் பெற்றோருடன் அனுப்ப மறுத்து, பாதுகாப்பான இல்லத்திற்கு மாற்ற உத்தரவிட்டது. இந்த வீடியோ காட்சிகளைப் பாகிஸ்தானியப் பத்திரிகையாளரும் ஆர்வலருமான வீங்காஸ் வெளியிட்டார்.
அதிகரிக்கும் கடத்தல் சம்பவங்கள்
இந்தச் சம்பவம் நடந்த மறுநாளே அதே பகுதியில் இருந்து பான்சி கோலி என்ற 14 வயதுச் சிறுமியும் கடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தாண்டோ அல்லாஹ்யார் மாவட்டத்தில் மட்டும் 10 நாட்களில் 6 இந்துச் சிறுமிகள் கடத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டுள்ளதாகப் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கோலி, பீல், மேக்வார் போன்ற விளிம்புநிலை ஏழைச் சமூகங்களைச் சேர்ந்த மக்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உரிய சட்ட உதவியோ அல்லது அரசியல் பிரதிநிதித்துவமோ கிடைப்பதில்லை என்று மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.
சிந்து குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் 2013-இன் படி, 18 வயதுக்கு உட்பட்டோர் குழந்தைகளாகக் கருதப்படுவர். எனவே, இத்திருமணங்கள் சட்டப்படி குற்றமாகும். அம்னஸ்டி இன்டர்நேஷனல் பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான இந்துப் பெண்கள் இதுபோன்ற கட்டாயத் திருமணங்களுக்கும், மதமாற்றத்திற்கும் ஆளாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆர்வலர்களின் கோரிக்கை
“எங்கள் சிறுமிகளைக் காப்பாற்றுங்கள்” என்றும், “அரசு ஆதரவு பெற்ற குழுக்கள் ஏதேனும் இந்துச் சமூகத்தினரைக் குறிவைக்கிறதா?” என்றும் சமூக ஆர்வலர் சொரத் சிந்து கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுமிகளின் வயதைச் சரியாக உறுதிப்படுத்த வேண்டும், அவர்களுக்குச் சுதந்திரமான சட்ட மற்றும் உளவியல் உதவிகளை வழங்க வேண்டும், மற்றும் அவர்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
