”எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம். ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம் என கூறியுள்ளோம் என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி, தில்லை நகர், ஐந்தாவது குறுக்கு தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் இன்றுகாலை 8:00 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திருச்சி, சென்னை உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட இடங்களில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. திருச்சி தில்லை நகரில் நடந்த சோதனை மதியம் 3மணிக்கு நிறைவடைந்தது.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ”தமிழ்நாடு வருமானவரித்துறையில் இருந்து 8 மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். எங்களிடம் சொன்னது டென்டரில் தவறு நடந்துள்ளது. தன் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை நடத்த வேண்டும் என கூறினார்கள்.

சோதனை நடத்திக் கொள்ளுங்கள் என கூறினோம். திருச்சி மற்றும் சென்னையில் எனது சகோதரர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. எந்த விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. அலுவலகத்தில் இருந்த கோப்பு ஒன்றை எடுத்துக் கொண்டனர்.
எனது சகோதரர் வரவு, செலவு கணக்கு எழுதி வைத்திருந்தார். அதை எடுத்துக் கொண்டு விட்டனர். என்னிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டனர். என் மீது மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எட்டு மணியிலிருந்து மூன்று மணி வரை எங்களிடம் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்தோம். டெண்டர் விஷயமாக நான் எதுவும் தவறாக செயல்படவில்லை. அமலாக்கத்துறையில் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலைமையில் உள்ளது. இது புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக எந்த ஆதாரமும் அவர்கள் கைப்பற்றவில்லை. தொடர்ந்து அவர்கள் சொல்வதற்கு ஒத்துழைப்பு கொடுப்போம். பழைய ஒத்துழைப்பு குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்லை. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நீதிமன்றம் சென்று நிரபராதி என நிரூபிப்போம்.
அரசாங்கம் காவல்துறை எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம் என கூறியுள்ளோம். அரசியல் நோக்கத்தோடு அச்சுறுத்தல் செய்யலாம் என்ற நோக்கில் இந்த சோதனை நடந்ததாக பார்க்கிறேன்.
சட்டமன்றத்தில் தவறுகளை சுட்டிக்காட்டி பேசியுள்ளோம். 110 நாட்களில் நடந்த விஷயங்கள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசினார். அதற்கு விளக்கம் கொடுப்பதாக முதல்வர் கூறியுள்ளார். இது உறுதியாக அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைதான். என் வீட்டில் இது மூன்றாவது முறையாக சோதனை நடைபெறுகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சி எதிர்க்கட்சி சார்ந்தவர்கள் வீட்டில் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடப்பது வழக்கம்.
எங்கள் தலைவர் ஸ்டாலின் பேசினார். சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறினார். அதன்படி நான் ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன்” என தெரிவித்தார்.
-ஜான் கண்ணா, திருச்சி மண்டல செய்தியாளர்
