குமரி மாவட்டம் தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் செல்வம் (46). பிரபல ரவுடியான இவர் மீது குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் செல்வத்துக்கு சொந்தமான தோட்டம், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கனேரி கிராமத்தில் உள்ளது. அன்று தனது தோட்டத்துக்கு சென்ற போது மர்ம கும்பலால் செல்வம் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. செல்வத்தின் கூட்டாளிகளான பொட்டல்குளத்தை சேர்ந்த சந்துரு (26), அவரது மனைவி கௌரி ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது செல்வம், சந்துரு சேர்ந்து குளத்தை குத்தகைக்கு எடுத்து அதில் தாமரை பூக்களை வளர்த்து விற்பனை செய்தனர். சமீபத்தில் ஒரு குளத்தை குத்தகைக்கு எடுத்த விவகாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக செல்வத்தை 2 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
