திமுக அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தத் தலைமை முடிவெடுத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டும், கட்சிக்குள் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளித்து மறுசீரமைப்பு செய்யும் நோக்கிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அதிரடி நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளார். இதன் முதற்கட்டமாக 70 வயதைக் கடந்த மூத்த நிர்வாகிகள் 13 நபர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி அமைப்பைச் சீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, திமுக தலைமை, மாவட்ட எண்ணிக்கையை 100-க்கும் அதிகமாக உயர்த்தவும், புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவும் வாய்ப்புள்ளது. தற்போது, கட்சி 78 மாவட்ட அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இளம் தலைவர்களுக்கு முக்கியப் பங்கு அளிப்பதில் கட்சித் தலைமை ஆர்வமாக உள்ளது. மேலும் மாவட்டச் செயலாளர்களுக்கு வயது வரம்பை நிர்ணயிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறது. மாவட்டங்களில் உள்ள கட்சி அமைப்பின் மீது தனிநபர்கள் நிரந்தரக் கட்டுப்பாட்டைச் செலுத்துவதைத் தடுக்க, மாவட்டச் செயலாளர்களுக்குக் குறிப்பிட்ட பதவிக்காலத்தை நிர்ணயிக்கவும் வாய்ப்புள்ளது.
கட்சி அமைப்பைச் சீரமைக்கவும், அதன் கட்டமைப்பில் புதிய உத்வேகத்தை அளிக்கவும் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அமைத்த குழு தனது இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குழுவின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்க, கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
“முன்மொழியப்பட்ட மாற்றங்களைச் செயல்படுத்த, அந்தப் பரிந்துரைகளை கட்சியின் அமைப்புச் சட்டத்தில் இணைக்க வேண்டியிருக்கும்” என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.
திமுக அமைப்பைச் சீரமைக்கப் பரிந்துரைக்க ஸ்டாலின் குழுவை அமைத்துள்ளார். இந்தக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், ஆர்.சக்கரபாணி, எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தமிழரசி ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பரந்தாமன் மற்றும் டாக்டர் எழிலன், கட்சி நிர்வாகி எஸ்.கே.பி.கருணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
“இளம் முகங்கள் மற்றும் பெண்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிப்பதன் மூலம் அமைப்பில் புதிய ரத்த ஓட்டத்தைப் பாய்ச்சுவது பரிந்துரைகளில் ஒன்று அமைப்பை மேலும் திறம்படச் செயல்பட வைக்க பரந்த அளவிலான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்” என்கிற ஸ்டாலின் முடிவால் இப்போது திமுகவில் கோலோச்சும் 13 திமுக மாவட்டச் செயலாளர்களில்
1) எ. வ. வேலு- திருவண்ணாமலை தெற்கு
2) அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் – தூத்துக்குடி தெற்கு
3) ரகுபதி – புதுக்கோட்டை தெற்கு
4) சு. முத்துசாமி – ஈரோடு தெற்கு
5) கோ. தளபதி – மதுரை மாநகர்
6) சுந்தர் – காஞ்சிபுரம் தெற்கு
7) செஞ்சி மஸ்தான் – விழுப்புரம் வடக்கு
8) எஸ்.ஆர். சிவலிங்கம் – சேலம் கிழக்கு
9) சாக்கோட்டை க. அன்பழகன் – தஞ்சாவூர் வடக்கு
10) நா. இராமகிருஷ்ணன் – தேனி
11) கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் – விருதுநகர்
12) ஆர். காந்தி – இராணிப்பேட்டை
13) இரா. ஆவுடையப்பன் – திருநெல்வேலி மேற்கு போன்றவர்கள் பதவி இழக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பதவி இழக்கும் இவர்களுக்கு கட்சியில் துணைப் பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என அவர்களை திருப்திபடுத்தும் வகையில் பதவி வழங்க ஸ்டாலின் ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது.
