தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாகவும், அநாகரிகமாகவும் பேசியதாகக் கூறி, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வர்த்தினி என்பவர் நயினார் நாகேந்திரன் மீது இந்தப் புகாரை அளித்துள்ளார்.
மாநிலத்தின் உயர் பதவியில் இருக்கும் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்ப உறுப்பினரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையிலும், அரசியல் நாகரிகத்திற்கு மாறாகவும் நயினார் நாகேந்திரன் பேசியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகளே தற்போது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளன. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் “அப்பா எங்கே?” என்ற தொனியில் பேசியதைச் சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் தனது கருத்தைத் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்போது நயினார் நாகேந்திரன், “சட்டப்பேரவைக்குப் போய் ‘அப்பா எங்கே, அப்பா எங்கே’ என்று தேடினால் எப்படித் தெரியும்? வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்கள்?” என்ற வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. அவரது இந்தப் பேச்சு முதலமைச்சர் விஜய்யின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, முதலமைச்சரின் குடும்பத்தைப் பற்றி தனிப்பட்ட முறையில் பேசுவது அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, முதலமைச்சரின் தாயாரை அரசியல் விவாதத்திற்குள் இழுத்துப் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்துள்ளன. தமிழக அரசுத் தரப்பைச் சேர்ந்தவர்களும், தவெக ஆதரவாளர்களும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, நயினார் நாகேந்திரன் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாகப் பேசியதாகக் கூறி, நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் வர்த்தினி டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். மேலும், சைபர் கிரைம் போர்ட்டல் மூலமாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாருடன், நயினார் நாகேந்திரன் பேசியதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய உரை தொடர்பான சமூக வலைதளப் பதிவுகள், வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது முழுமையான உரையைப் பெற்று, அவர் பயன்படுத்திய வார்த்தைகளின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தியச் சட்டங்களின் கீழ் உரிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நயினார் நாகேந்திரன் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நயினார் நாகேந்திரனின் பேச்சு தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புகார் மீது காவல்துறை மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
