நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய்யின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வரும் நபர்களுக்கு நடிகை மீஷா கோஷல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்த நடிகரை ஆதரிப்பதும், அவரது திரைப்படத்தைப் பார்ப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை என்றும், அதற்காக விஜய் ரசிகர்கள் மீது வெறுப்பைக் கொட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

.சமீபத்தில் வெளியான “ஜனநாயகன்” திரைப்படத்தைப் பார்த்த பிறகு, நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் வருகையைப் பாராட்டி, மீஷா கோஷல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவுக்குப் பிறகு, மாற்றுக் கட்சியினரும், பிற நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளால் விமர்சித்து, இழிவான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட மீஷா கோஷல், அந்த விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவில், “தங்களுக்கு பிடித்த நடிகரின் திரைப்படத்தைப் பார்ப்பதும், அவரை மனதார ஆதரிப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமும் ஜனநாயக உரிமையும் ஆகும். விஜய் ரசிகர்கள் என்பதற்காக எங்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பைக் காட்டுகிறீர்கள்? நாங்கள் என்ன தவறு செய்தோம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “வேறு எந்த நடிகரின் ரசிகர்களாக இருந்தாலும் இதுபோல் இழிவாகப் பேசுவீர்களா? விஜய் ரசிகர்களை மட்டும் குற்றவாளிகளைப் போல சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் தீவிரமான விஜய் ரசிகை என்பதால் அது யாருக்காவது பிடிக்கவில்லை என்றால், “தாராளமாக என்னை சமூக வலைத்தளங்களில் ‘அன்ஃபாலோ’ (Unfollow) செய்துவிட்டு என் பக்கத்தை விட்டு வெளியேறலாம். ஆனால் தேவையில்லாமல் வெறுப்பையும் அவதூறையும் பரப்ப வேண்டாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டையும், மாணவர்களின் போராட்டங்களையும், குறிப்பாக நீட் (NEET) தேர்வு தொடர்பான பிரச்சினைகளையும் ஒன்றோடு ஒன்று இணைத்து பேசுவது முற்றிலும் அர்த்தமற்றது. ஒரு திரைப்படத்தை ரசிப்பதற்கும், அரசியல் அல்லது மாணவர் போராட்டங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“எனக்குப் பிடித்த நடிகரின் திரைப்படத்தைப் பாராட்டுவதால் நான் தவறானவளாகிவிட மாட்டேன். உலகத்தில் ஏராளமான நடிகர்களும் நடிகைகளும் இருக்கிறார்கள். யாருக்கு யாரைப் பிடிக்க வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அப்படி இருக்கும்போது விஜய் ரசிகர்கள் மீது மட்டும் ஏன் கமெண்ட் பாக்ஸ்களில் இவ்வளவு வன்மத்தைக் கொட்டுகிறீர்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல், “நாங்கள் எங்கள் சொந்தப் பணத்தில் டிக்கெட் வாங்கி, திரையரங்கில் அமர்ந்து திரைப்படத்தைப் பார்க்கிறோம்; கைதட்டுகிறோம், ஆடுகிறோம், உணர்ச்சிவசப்படுகிறோம். இதனால் உங்களுக்கு என்ன பாதிப்பு? படம் பிடிக்கவில்லை என்றால் வர வேண்டாம். யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை” என்று அவர் நேரடியாகப் பேசியுள்ளார்.
விமர்சகர்களை நோக்கி, “சிறு குழந்தைகள் கூட உங்களை விட அதிகப் பக்குவத்துடன் இருக்கிறார்கள். தயவுசெய்து பக்குவமடையுங்கள். ‘வாழு… வாழ விடு’ என்ற கொள்கையைப் பின்பற்றுங்கள்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மீஷா கோஷல் பாராட்டியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம், தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசி மற்றும் முக்கியமான மைல்கல் திரைப்படமாகக் கருதப்படுகிறது. சினிமாவிலிருந்து முழுமையான அரசியல் பயணத்துக்குச் செல்லும் முக்கியக் கட்டத்தில், கடந்த ஜூலை 23, 2026 அன்று உலகம் முழுவதும் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே மிகவும் அதிகமாக இருந்தது.

மீஷா கோஷல் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தரப்பினர், “ஒரு திரைப்படத்தை ரசிப்பதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தங்களுக்குப் பிடித்த நடிகரை ஆதரிக்கும் உரிமை உள்ளது. மீஷா கோஷல் பேசியதில் முழு நியாயம் இருக்கிறது” என்று அவருக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர், அரசியல் கட்சித் தலைவராக மாறிய பிறகும் விஜய் ரசிகர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மீஷா கோஷலின் இந்த வீடியோ தேவையற்ற கவனத்தை ஈர்க்கும் முயற்சி என்றும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மீஷா கோஷலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், திரைப்பட ரசிகர்கள், அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் இணையப் பயனாளர்கள் மத்தியில் இது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், நடிகை மீஷா கோஷல் தமிழ் சினிமாவில் “ஏழாம் அறிவு”, “ராஜா ராணி”, “மெர்சல்” உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
